தோனி - சிஎஸ்கே உறவு
தோனி இல்லாத சிஎஸ்கே அணியை நினைத்து பார்க்கக் கூட முடியாது. அதே போல, ஒரு அணியுடன் இப்படி ஒரு வீரர் உறவு கொண்டாட முடியுமா? பிணைப்புடன் இருக்க முடியுமா? என ஆச்சரியம் அளிக்க வைப்பது தோனி - சிஎஸ்கே உறவு.
தோனி ரசிகர்கள்
இன்று சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ரசிகர்கள் அனைவரும் தோனிக்காக அந்த அணியை ஆதரிப்பவர்கள் தான். சிஎஸ்கே அணியின் முகமாக இருக்கிறார் தோனி. ஆனால், முதலில் 2008 ஐபிஎல் ஏலத்தில் தோனியை வாங்க சிஎஸ்கே அணி முயற்சிக்கவில்லை.
சுப்பிரமணியம் பத்ரிநாத் சொன்ன தகவல்
ஆம், இது பற்றி இதற்கு முன்பும் சிலர் பேசி இருந்தாலும், சிஎஸ்கே அணியில் துவக்கம் முதல் சில சீசன்களில் ஆடிய சுப்பிரமணியம் பத்ரிநாத் சில கூடுதல் தகவல்களை கூறினார். சேவாக் - சிஎஸ்கே இடையே என்ன நடந்தது? அதன் பின் தோனியை வைத்து எப்படி சிஎஸ்கே அணி ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது? என்பது பற்றி அவர் கூறி உள்ளார்.
ஐபிஎல் ஏலம்
2008 ஐபிஎல் தொடர் துவங்கிய போது முதன் முதலில் ஏலம் நடந்தது. அதற்கு முன் ஐபிஎல் அணிகள் தங்கள் நகரங்களை சேர்ந்த இந்திய அணி வீரர்களை தாங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பின. அந்த வீரர்கள் ஒப்புக் கொண்டால் அணிகள் அவர்களை "ஐகான் வீரர்கள்" என்ற முறையில் தங்கள் அணியில் தக்க வைக்க பிசிசிஐ வழிவகை செய்தது.
அதிரடி மன்னன் சேவாக்
அப்போது சிஎஸ்கே அணி பெரிய அளவில் தமிழக வீரர்கள் அப்போது இந்திய அணியில் ஆடவில்லை என்பதால் பெரிய ஜாம்பவான் இந்திய வீரர் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டது. அப்போது அதிரடி மன்னன் சேவாக்கை வாங்க அந்த அணி முயன்றது.
நோ சொன்ன சேவாக்
அவரிடம் அது குறித்து கேட்ட போது அவர் சிஎஸ்கே அணிக்கு ஆட மறுப்பு கூறி இருக்கிறார். "அப்போது சேவாக் தான் டெல்லியிலேயே வளர்ந்தவன் என்பதால் டெல்லி அணியில் தனக்கு நல்ல தொடர்பு இருக்கும் என கூறினார்" என்றார் பத்ரிநாத்.
தோனியை வாங்க முடிவு
சேவாக் இல்லை என்ற நிலையில் ஏலத்தில் நட்சத்திர வீரரை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சிஎஸ்கே அணி. "அதன் பின் ஏலம் வந்தது. யார் சிறந்த வீரர் என அவர்கள் பார்த்தார்கள். அதற்கு முன்பு தான் 2007 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று இருந்தது. எனவே அவர்கள் தோனியை வாங்க முடிவு செய்தார்கள்" என்றார் பத்ரிநாத்.
ஒரே கல்லில் மூன்று மாங்காய்
"பலருக்கு சேவாக்கை வாங்குவதற்கு பதில் தான் சிஎஸ்கே தோனியை வாங்கினார்கள் என்பது தெரியாது. என்னைப் பொறுத்தவரை, தோனி, சிஎஸ்கே அணிக்கு வந்தது ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது போன்றது" எனக் கூறி அது பற்றி விளக்கம் அளித்தார்.
அந்த மூன்று பலன்கள்
"முதலில் அவர் தான் இந்த உலகிலேயே சிறந்த கேப்டன். அவர் வெல்லாத கோப்பையே இல்லை. இரண்டாவது அவர் சிறந்த பினிஷர். உலகின் அனைத்து சிறந்த அணிகளிலும் பினிஷர் என்பது முக்கிய அங்கம். மூன்றாவது, அவர் அற்புதமான விக்கெட் கீப்பர். நான் பார்த்ததிலேயே சிறந்த மற்றும் பாதுகாப்பான விக்கெட் கீப்பர் அவர்" என்றார் பத்ரிநாத்.
கடைசி தொடர்?
தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்தும் இந்த ஆண்டுடன் அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியின் தோனி ஆடும் கடைசி ஐபிஎல் தொடர் இந்த சீசனாக இருக்கலாம்.