53 நாட்கள் ஐபிஎல் போட்டிகள்
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவுள்ளது. 53 நாட்கள் நடைபெறவுள்ள இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10ம் நடைபெறவுள்ளது. ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் திட்டமிடப்பட்டுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்கும் வகையிலும் முன்னதாக குவாரன்டைன் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் வகையில் வரும் 20ம் தேதிவாக்கில் அணி வீரர்கள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம்
இந்நிலையில் வரும் 21ம் தேதி தங்களது பயணத்தை சார்ட்டர்ட் விமானங்கள் மூலம் துவங்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் முன்னதாக வரும் 15ம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள பயிற்சி முகாம்களில் பங்கேற்கவுள்ளனர். இதில் கேப்டன் எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சஹர் மற்றும் பியூஷ் சாவ்லா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நல்ல துவக்கமாக அமையும்
இந்நிலையில் இந்த பயிற்சி முகாம் அணி வீரர்களுக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அணியின் பௌலிங் கோச் லஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள அவர்களுக்கு நல்ல பார்மை இந்த முகாம் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காயங்கள் ஏற்பட வாய்ப்பு
சிஎஸ்கே வீரர்கள் தங்களது பகுதிகளில் ஏற்கனவே பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு போட்டிகளை ஆடவரும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் சிஎஸ்கே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகமாக சொல்ல தேவையில்லை
மேலும் அணியில் சீனியர் வீரர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு அவர்களின் பிட்னஸ் குறித்து அதிகமாக கூறத் தேவையில்லை என்றும் அவர்கள் தங்களை சரியாக கவனித்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டத்தில் ஈடுபடும்போது தசைகள் சிறிது இறுக்கமாக இருக்கும் என்றும், அதை கவனித்து பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.