தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போட்டி
2010இல் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக குவாலியர் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்தார். அது தான் ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட முதல் சதம்.
திடீர் தகவல்
அந்தப் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடிக்கும் முன்பே தான் அவர் 190 ரன்களுக்கு மேல் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க செய்ததாக இப்போது "திடீர் தகவல்" ஒன்றை கூறி இருக்கிறார் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.
எல்பிடபுள்யூ அவுட்?
இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சச்சின் பற்றிய விவாதத்தின் போது இந்த தகவலை அவர் கூறினார். சச்சின் 190 ரன்கள் எடுத்த நிலையில் அவரை தான் எல்பிடபுள்யூ முறையில் தான் ஆட்டமிழக்கச் செய்ததாகவும், அம்பயர் அவுட் தர மறுத்ததாகவும் கூறினார்.
அம்பயர் சொன்ன காரணம்
அப்போது தான் ஏன் அவுட் தர மறுத்தீர்கள் என அம்பயர் இயான் கூல்டு-இடம் கேட்டதாகவும், அதற்கு அம்பயர் இயான், "சுற்றிப் பாருங்கள். இப்போது நான் அவுட் கொடுத்தால், என்னால் ஹோட்டலுக்கு திரும்பி செல்ல முடியாது" என்றார் எனவும் கூறினார் ஸ்டெய்ன்.
உண்மை சம்பவமா?
அதாவது சச்சினுக்கு 190 ரன்கள் இருக்கும் போது எல்பிடபுள்யூ அவுட் கொடுத்தால் இந்திய ரசிகர்கள் தன் மீது கோபம் அடைவார்கள் என அம்பயர் கூறியதாக டேல் ஸ்டெய்ன் கூறி உள்ளார். இவ்வளவு விளக்கத்துடன் ஸ்டெய்ன் கதை சொன்னதால் இது உண்மை சம்பவம் என்றே பலரும் எண்ணினார்.
சுத்தப் பொய்
ஆனால், இந்திய ரசிகர்கள் சிலர் இப்படி ஒரு சம்பவம் அந்த போட்டியில் நடக்கவே இல்லையே என சந்தேகப்பட்டு அவர் சொன்னது உண்மை தானா? என ஆய்வு செய்து அது பொய் என கண்டுபிடித்துள்ளனர். அந்த போட்டியில் ஒரு முறை கூட ஸ்டெய்ன் வீசிய பந்து எல்பிடபுள்யூ ஆகவில்லை.
31 பந்துகள் வீசினார்
அந்தப் போட்டியில் சச்சின் முதல் ஓவர் முதல் கடைசி ஓவர் வரை பேட்டிங் செய்தார். அதில் டேல் ஸ்டெய்ன் மட்டும் அவருக்கு 31 பந்துகளை வீசி இருந்தார். சச்சின் 190 ரன்களை எட்டிய பின் மூன்று பந்துகளை மட்டுமே வீசி இருந்தார்.
எல்பிடபுள்யூ அவுட் கேட்கவில்லை
அந்த 31 பந்துகளில் ஒருமுறை கூட எல்பிடபுள்யூ-க்கு நெருக்கமாக கூட டேல் ஸ்டெய்ன் பந்து வீசவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் கூறியது போல ஒரு முறை கூட அவர் அம்பயரிடம் சச்சினுக்கு எல்பிடபுள்யூ அவுட் கேட்கவில்லை.
என்னமா கதை விட்டுள்ளார்..
ரசிகர்கள் இந்த உண்மையை ஆதாரத்துடன் இணையத்தில் கூறி உள்ளனர். என்னமா கதை விட்டுள்ளார் டேல் ஸ்டெய்ன் என அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்தப் போட்டியில் சச்சின் சரியாக 200 ரன்கள் குவித்தார். இந்தியா 403 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.