ஜோஹன்னஸ்பர்க்: தனது டெஸ்ட் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சோகத்தை சந்தித்திருக்க மாட்டார் உலகின் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின். அவருக்கு அப்படி ஒரு கசப்பான அனுபவத்தை இந்திய வீரர்கள் ஸ்டெயினுக்குக் கொடுத்து விட்டனர் - அதுவும் அவரது சொந்த ஊரில் வைத்து.
இதுவரை விக்கெட்களை சரமாரியாக சாய்க்காமல் மைதானத்தை விட்டுப் போனதே இல்லை ஸ்டெயின். ஆனால் ஜோஹன்னஸ்பர்க் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பெரும் சோதனைக்குள்ளாக்கி விட்டனர் இந்திய வீரர்கள். வெறும் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது ஸ்டெயினால். அதுவும் பெருமளவில் ரன்களை வாரிக் கொடுத்து விட்டு.
இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் அபாரமாக பந்து வீசினார் ஸ்டெயின். அதில் இரண்டு போட்டிகளில் அவர் 15 ஓவர்கள் மொத்தம் வீசி வெறும் 42 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது இந்தியா.
முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்கள் பந்து வீசிய அவர் 61 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் கிடைக்கவில்லை.வெறும் கையுடன் திரும்பினார்.
2வது இன்னிங்ஸில் 30 ஓவரக்ள் போட்டு 104 ரன்களை அவர் விட்டுக் கொடுத்திருந்தார். ஒரே இன்னிங்ஸில் 100க்கும் மேற்பட்ட ரன்களை அவர் விட்டுக் கொடுத்தது அவரது டெஸ்ட் வாழ்க்கையில் இதுவே முதல் முறை என்பதால் ஸ்டெயின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் 2011 முதல் 2012 வரையிலான டெஸ்ட் போட்டிகளில், 27 இன்னிங்ஸ்களில் விக்கெட் இல்லாமல் அவர் வெறும் கையுடன் திரும்பியதும் இதுவே முதல் முறையாகும்.
இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 56 ஓவர்களை வீசி 165 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைச் சாய்த்தார் ஸ்டெயின். நிச்சயம் இது அவருக்குப் பெயின் தரும் என்பதில் சந்தேகம் இல்லைதான்.