தென்னாப்பிரிக்காவில் பாதிப்பு
ஆப்பிரிக்க கண்டத்தில் தென்னாப்பிரிக்காவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை 55,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கே மூன்றாவது கட்ட லாக்டவுன் அமலில் உள்ளது.
மதுபான விற்பனை
கொரோனா வைரஸ் காரணமாக தென்னாப்பிரிக்காவில் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும், மூன்றாவது கட்ட லாக்டவுனில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது பெரிய வினையாக மாறி உள்ளது.
கொலைகள்
மதுபான விற்பனை துவங்கியது முதல் தென்னாப்பிரிக்காவில் கொலைகள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது. ஜூன் 1 அன்று 40 கொலைகளும், அதற்கு மறுநாள் 51 கொலைகளும் நடந்ததாகவும், கடந்த ஞாயிறு அன்று 69 கொலைகளும் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசம்பாவித சம்பவங்கள்
மதுபானத்தை அருந்திய நிலையில் பலரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தன் வீட்டிற்குள் நுழைய மூன்று முறை முயற்சிகள் நடந்தாக கூறி அதிர வைத்துள்ளார்.
தாயை பயமுறுத்தி இருக்கிறார்கள்
இது பற்றி அவர் ட்விட்டரில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் என் வீட்டில் மூன்று முறை அத்துமீறி நுழைய முயற்சி நடந்துள்ளது. நேற்று என் நண்பரின் காரை நாசம் செய்தார்கள். இன்று வீட்டில் தனியாக இருந்த என் தாயை பயமுறுத்தி இருக்கிறார்கள் என கூறி அதிர வைத்துள்ளார்.
பாதுகாப்பாக இருங்கள்
மேலும், கொரோனா மக்களை விரக்தி நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும், இந்த ட்வீட் அனைவருக்கும் உதவும் என நம்புவதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் கூறி உள்ளார் டேல் ஸ்டெய்ன். அவரது பதிவு தென்னாப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
தீர்வு காண வேண்டும்
உலகம் முழுக்க லாக்டவுனால் ஏற்பட்ட வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு ஆகியவற்றால் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் கொரோனா வைரஸுக்கு தீர்வு கிடைக்காத நிலையில், இந்த பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகள் தீர்வு காண வேண்டும்.