முதல் டி20 போட்டி
160 ரன்களுக்குள் சுருட்டியிருக்க வேண்டிய அந்த அணியை கடைசி ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கி அர்ஷ்தீப் சிங் 176 ரன்கள் வரை கொண்டு சென்றார். இதனால் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
பாக். வீரர் குற்றச்சாட்டு
இந்நிலையில் இந்த தோல்விக்கு பாண்ட்யா தான் காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஹர்திக் பாண்ட்யா புத்திசாலித்தனமாக செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை. அவரிடம் எந்தவித திட்டமுமே கிடையாது. ஏனென்றால் பவுலர்களை ரொட்டேஷன் செய்வதே சரியில்லாமல் தான் இருந்தது. ஷிவம் மவியை மிகவும் தாமதமாக கொண்டு வந்தார். ஆனால் அவரை முன்கூட்டியே கொண்டு வந்திருந்தால் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்.
பாண்ட்யா சொதப்பல்
களத்தில் ஸ்பின்னர்களுக்கு நல்ல டேர்ன் கிடைத்திருந்தது. எனவே தீபக் ஹூடாவுக்கு இன்னும் சில ஓவர்களை கொடுத்திருக்க வேண்டும். இங்கு தான் ஹர்திக் பாண்ட்யா சொதப்பினார். அவரிடம் எந்த திட்டமுமே இல்லாமல் போனது. ஹர்திக் பாண்ட்யாவே புதிய பந்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை. சரியான பகுதியில் வீசாததால் நியூசிலாந்தின் ஓப்பனர்கள் அதிரடி காட்டினர். ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரையே சொதப்பியதால் இதன் பின்னர் வந்த இந்திய பவுலர்கள் நிறைய ரன்களை கசியவிட்டனர் என கனேரியா கூறியுள்ளார்.
2வது டி20
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி நாளை ( ஜனவரி 29 ) லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை போலவே இந்த களத்திலும் ஸ்பின்னர்களுக்கு தான் சாதகமாக இருக்கும் என்பதால் கடும் போட்டியை எதிர்பார்க்கலாம். இந்த முறையாவது பாண்ட்யா சாஹலுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.