படுதோல்வி
இந்தியா - இங்கிலாந்து மோதிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடிய நிலையில் கடைசி 3 போட்டிகள் ரன் குவிக்க மிகவும் திணறியது. குறிப்பாக கடந்த 112 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஒரு தொடரில் 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும்.
திணறல்
இங்கிலாந்து பேட்ஸ்மேனகளின் ரன் குவிப்புக்கு இந்திய ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் முட்டுக்கட்டையாக இருந்தனர். இந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 32 விக்கெட்களும், அக்ஷர் பட்டேல் 27 விக்கெட்டும் எடுத்து, முதல் 2 இடங்களில் உள்ளனர். அந்த அளவிற்கு ஸ்பின்னர்களிடம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறியுள்ளனர்.
மோசம்
இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் டேரன் கேக், இது இங்கிலாந்து அணிக்கு மிகவும் மோசமான தோல்வி, இந்தியாவின் சிறந்த ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திறமையில்லாமல் போய்விட்டது. பிட்ச்-ல் சிறிது டேர்னிங் இருந்ததுதான். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் டெக்னிக்குகளில் சொதப்பியுள்ளனர். அவர்களின் ஆட்டத்தில் மனநிலை சரியில்லை. ஒவ்வொரு முறையும் கேம் ப்ளான் உள்ளது என்கிறோம். ஆனால் டாப் ஆர்டர் வெளியேறிக்கொண்டே தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்
இங்கிலாந்து அணியில் முதல் டெஸ்டில் ஜோ ரூட் இரட்டை சதம் அடித்த பிறகு பேட்டிங்கில் அவ்வளவாக எந்த வீர்ரும் சோபிக்கவில்லை. இதன் விளைவாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ரேஸில் இங்கிலாந்து அணியை முந்தி இந்திய அணி நுழைந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் மாதம் மோதவுள்ளன.