கேப்டன் பதவி வகிக்க வாழ்நாள் தடை
கடந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை உப்புத்தாள் கொண்டு சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட டேவிட் வார்னருக்கு ஓராண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அவர் கேப்டனாக பதவி வகிக்க வாழ்நாள் தடைவிதித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா உத்தரவிட்டுள்ளது.
335 ரன்கள் அடித்து சாதனை
இந்நிலையில் ஓராண்டு தடை நீங்கி மீண்டும் ஆடத்துவங்கியுள்ள டேவிட் வார்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிலெய்டில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 335 ரன்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி வீரர் டான் பிராட்மேனின் நீண்ட நாள் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
வார்னர் நம்பிக்கை
தான் திரும்பவும் அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த வார்னர், முன்பை விட மிகுந்த ஆவலுடன் தான் விளையாடுவதாக கூறியுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் சிறப்பான தருணங்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரும்பி பார்க்கவில்லை
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தன் மீதான தடையை தான் மதிப்பதாகவும், ஆனால் அதுகுறித்து கவலைப்படாமல் தொடர்ந்து முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்த வார்னர், அதிலிருந்து வெளியில் வந்து அதிக ரன்களை குவிப்பதே தனது லட்சியமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பாக விளையாடவில்லை
இங்கிலாந்துக்கெதிரான ஆஸ்திரேலியாவின் தொடரில் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொண்ட வார்னர், ஆனால் தொடர்ந்து அதிக ரன்களை குவிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தான் முன்னேறி நடை போடுவதாகவும் தெரிவித்தார்.