கேன்பரா: ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் அளவிற்கு டேவிட் வார்னர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமாக கருதுவது இந்த தொடரைத் தான். கிரிக்கெட் வரலாற்றில் பழமையான ஆஷஸ் தொடர், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு மிக முக்கியமான தொடர்.
உலக கோப்பையை வென்ற உற்சாகத்தில் ஆஷஸ் தொடரை சந்திக்கும் இங்கிலாந்து அணியில், ஜேசன் ராய், ஆஷஸ் தொடருக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார். பட்லர், பேர்ஸ்டோ என அதிரடி மன்னர்கள் இங்கிலாந்து அணியில் உள்ளனர். தலை சிறந்த பேட்ஸ்மேன்களான ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர். பேட்டிங்,பவுலிங், பீல்டிங் அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது இங்கிலாந்து.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் திரும்பியிருப்பது பெரிய பலம். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடைபெற்ற பான்கிராப்ட் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அவர்கள் தவிர டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, மேத்யூ வேட் ஆகியோரும் உள்ளனர்.
இந் நிலையில் ஆஷஸ் தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல் படுவார்கள் என்றார். அவர் மேலும் கூறியதாவது:
டேவிட் வார்னருக்கு ஏற்பட்ட காயம் சரியாகி விட்டது. டேவிட் வார்னர் முழுமையான உடற்தகுதியுடன் உள்ளார். முதல் போட்டியில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.