மெகா ஏலத்திற்கான அப்டேட்
இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த அவர், மனக்கசப்புகளுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வந்த ஐதராபாத் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையையும் வென்று கொடுத்தவர் டேவிட் வார்னர்.
கழட்டிவிட்ட ஐதராபாத் அணி
ஆனால் இந்த ஆண்டு அணி நிர்வாகத்திற்கும் வார்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டேவிட் வார்னரும் ஒதுக்கப்பட்டார். இதனால் அந்த அணி நன்றி மறந்தது என அழைத்து ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
வார்னரின் அதிரடி
இந்நிலையில் வார்னர் தற்போது ஆடி வரும் ருத்ர தாண்டவம் ஐதராபாத் அணிக்கு நெருக்கடிகளை அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தது முதல் வார்னர் தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 89 ரன்களை விளாசினார். அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 49, நியூசிலாந்துடன் 53 என அட்டகாசம் செய்தார். டி20ல் தான் இப்படி என்றால் தனது கோபத்தை டெஸ்ட் போட்டிகளிலும் காட்டி வருகிறார். ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் 94 ரன்கள், 2வது டெஸ்ட் போட்டியில் 95 ரன்கள் என மிரட்டி வருகிறார்.
சிக்கிய ஐதராபாத்
இதனால் வரும் மெகா ஏலத்தில் வார்னரிம் மவுசு உச்சிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து அணிகளும் வார்னரை ஏலம் எடுக்க வியூகம் வகுத்து வரும் சூழலில் ஐதராபாத் அணி மட்டும், நல்ல வீரரை கழட்டிவிட்டுடோமே என்று சங்கடமான நிலையில் சிக்கியுள்ளது. இதனை ரசிகர்களும் கிண்டலடித்து வருகின்றனர்.