வீழ்ந்த விக்கெட்டுகள்
ஐபிஎல் 2021 தொடரில், 9 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 6 ஆட்டங்களில் தோற்றுள்ளது. மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது அந்த அணிக்கு கனவாகவே போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பும் ஹைதராபாத் அணியுடன் பஞ்சாப் மோதியது. இந்த தொடரில், ஹைதராபாத் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டும் தான் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று டாஸ் வென்ற கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் அடிநாதமே லோகேஷ் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வாலின் அதிரடி பேட்டிங் தான். ஆனால், இன்று இருவரும் மிக விரைவில் அவுட்டானார்கள். மாயங்க் 5 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 21 ரன்னிலும் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட க்றிஸ் கெயில், 14 ரன்களில் ரஷீத் கான் ஓவரில் அவுட்டானார். பிறகு நிகோலஸ் பூரன் சிக்ஸ் அடுத்து சிறப்பாக இன்னிங்ஸை தொடங்கினாலும் 8 ரன்களில் கேட்ச் ஆனார். தட்டி தட்டி விளையாடிய எய்டன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
டோட்டல் பேட்டிங் ஃபெயிலியர்
இதன் பிறகு கடைசி நம்பிக்கையாக இருந்த தீபக் ஹூடா, 13 ரன்களில் அவுட்டாக அதன் பிறகு ராஜஸ்தான் அணியால் மீண்டு வரவே முடியவில்லை. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. டோட்டல் பஞ்சாப் அணியின் பேட்டிங்கும் ஃபெயிலியர் ஆனது. கேப்டனாக லோகேஷ் ராகுல் எவ்வளவோ முயன்றாலும், அந்த அணி ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கிவிடுகிறது. நன்றாக விளையாடும் போட்டியில், கடைசி நேரத்தில் தோற்பது என்பது பஞ்சாப் அணியின் வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான 5 ரன்கள் கூட அடிக்க முடியாமல் பஞ்சாப் தோற்றது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. 19 ஓவர்கள் வரை ஆட்டத்தில் முழுமையாக டாமினேட் செய்த பஞ்சாப், கடைசி ஓவரில் மிக மோசமாக சொதப்பி தோற்றது. இப்போது ஆரம்பம் முதலே சொதப்பி போட்டியை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது.
முதல் ஓவரிலேயே அவுட்
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில், முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் அவுட்டாகி வெளியேறினார். ஷமி ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுத்து எட்ஜ் ஆகி வெளியேறினார். கடந்த போட்டியிலும் முதல் ஓவரிலேயே வெளியான வார்னர், இந்த போட்டியிலும் முதல் ஓவரில் அவுட்டாகி அணிக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். இதனால், அடுத்த போட்டியில் வார்னரை நீக்கும் முடிவை சன்ரைசர்ஸ் நிர்வாகம் எடுத்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதில், ஜேஸன் ராயை களமிறக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஜேஸன் ராய்க்கு வாய்ப்பு
வார்னர் தலைமையில் ஐபிஎல் கோப்பை வென்ற அணி ஹைதராபாத். கேப்டன்ஷிப்பிலும், பேட்டிங்கிலும் அவர் அணியில் அவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், சமீப காலமாக அவரது கேப்டன்ஷிப்பில் தொய்வு ஏற்பட, அணி நிர்வாகம் அவரை அணியில் இருந்தே நீக்கியது. பிறகு வில்லியம்சனை கேப்டனாக்கியது. ஆனால், அவரது கேப்டன்ஷிப்பிலும் அணிக்கு தோல்வியே மிஞ்சியது. எனினும், ஐபிஎல்-ன் இரண்டாம் பாதியில், மீண்டும் ஒரு பேட்ஸ்மேனாக வார்னர் களமிறக்கப்பட்டாலும் அவரால் அந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இன்றைய போட்டியையும் சேர்த்து, இரண்டு போட்டியிலும் அவர் முதல் ஓவரிலேயே அவுட்டாகி இருக்கிறார். இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும் சன்ரைசர்ஸ் நிர்வாகம், வார்னருக்கு பதில் ஜேஸன் ராயை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.