ஆஸியின் சிறப்பான வீரர்
ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரராக விளங்கும் டேவிட் வார்னர், அந்த அணியின் சிறப்பான பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த வார்னர், மீண்டும் அணிக்காக களமிறங்கி டெஸ்ட் போட்டியில் முச்சதத்தை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆலன் பார்டர் விருது பெற்ற வார்னர்
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் டேவிட் வார்னருக்கு ஆலன் பார்டர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தான் ஆடும் போட்டிகளின் மூலம் பல்வேறு சாதனைகளை புரிந்துவரும் டேவிட் வார்னருக்கு சிறப்பு செய்யும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
டி20 போட்டிகளில் விலக முடிவு
இந்நிலையில் தொடர்ந்து 3 வடிங்களிலும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது சிரமமாக உள்ளதாக டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். போட்டிகளின் அட்டவணையை தான் பார்த்ததாகவும், போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்தடுத்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது மிகவும் கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டேவிட் வார்னர் ஆதங்கம்
தனக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் அவர்களையும் மனைவியையும் கவனிக்க முடியாமல் அடுத்தடுத்து பயணம் மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். டி20 போட்டிகளில் அடுத்தடுத்து உலக கோப்பைகள் வரவுள்ள நிலையில், அதையடுத்து டி20போட்டிகளிலிருந்து ஓய்வெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டும் இந்தியாவில் அடுத்த ஆண்டும் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படவுள்ளது.
டி20 போட்டிகளில் விலகிய வீரர்கள்
டி20 போட்டிகளை விளையாடுவது மிகவும் சவாலானது என்று தெரிவித்துள்ள டேவிட் வார்னர், இந்த போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்பும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த போட்டிகளின் சவாலை கருத்தில்கொண்டுதான் ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் வீரேந்திர சேவாக் போன்றவர்கள் அதிலிருந்து விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.