ஹைதராபாத் வென்ற கோப்பை
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருப்பவர் டேவிட் வார்னர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இதுவரை நடக்கவில்லை. நடக்குமா என்றும் தெரியவில்லை. ஏகப்பட்ட சிக்கல்களில் உள்ளது ஐபிஎல். ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள போதிலும் கூட அதுவும் நடக்குமா என்பது சந்தேகம்தான். இந்த நிலையில்தான் ஐபிஎல் நினைவுகளில் மூழ்கியுள்ளார் டேவிட் வார்னர்
மை இந்தியன் பேமிலி
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இன்று ஒரு புகைப்படம் ஒன்றை போட்டுள்ளார். அதில், இதுதான் எனது இந்திய குடும்பம் என்று கேப்ஷன் போட்டு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்று கோப்பையை தூக்கிப் பிடித்தபடி இருக்கும் காட்சியை வெளியிட்டுள்ளார். இதுதான் எனது சிறந்த ஐபிஎல் தருணம் என்றும் டேவிட் வார்னர் கூறியுள்ளார். அந்தப் புகைப்படம் பல செய்திகளைச் சொல்கிறது.
|
2016ல் ஹைதராபாத் சாம்பியன்
2016ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது எடுக்கப்பட்ட படம் அது. இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத்தான் போட்டு மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் டேவிட் வார்னர். மேலும் ஐபிஎல் தொடங்காமல் இருப்பதையும் மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள்
கொரோனாவைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. எப்போது போட்டிகள் மீண்டும் நடக்கும் என்று யாராலுமே சொல்ல முடியவில்லை. காரணம் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொஞ்சம் கூட அது குறையவே இல்லை. இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் நடந்து வருவதால் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாத நிலை நிலவுகிறது.
ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு முடிவு தெரியும்
இந்திய வீரர்களை மட்டும் வைத்து போட்டியை நடத்தலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் எதுவாக இருந்தாலும் ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகுதான் பிசிசிஐ முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது. இதேபோல இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியையும் கூட அடுத்த வருடத்திற்குத் தள்ளி வைத்து விட்டனர்.