இந்தியா ஆஸ்திரேலிய மோதிய தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இந்தத் தொடர், இந்த வருடத்தில் நடைபெற்ற மிக முக்கியமான தொடராகும். முதலில் நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முழு தொடரையும் கைப்பற்றியது. அதன்பின் நடந்த முதல் டி-20 போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இரண்டாவது டி-20 போட்டியில் வெறும் 118 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது. இந்த நிலையில் யார் தொடரைக் கைபற்ற போவது என்ற கேள்வி எழுந்ததால் மூன்றாவது போட்டி அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட ஆட்டம்
இந்த நிலையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நடைபெற இருந்த மூன்றாவது டி-20 போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் என்பதால் அது மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தப் போட்டிக்கு எமனாக ஹைதராபாத் மழை வந்து நின்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் மழை காரணமாக ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகமாக இருந்த நிலையில், தொடர் மழையால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மொத்தமாக கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் மீதான தாக்குதல்
இந்த மூன்றாவது டி-20 போட்டிக்கு முன்பாக கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வென்றது. ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத காரணத்தால் சில விஷமிகள் ஆஸ்திரேலிய அணி சென்ற பஸ்ஸின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சில ரசிகர்கள் மறுநாள் ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தனர். தற்போது இதைக் குறிப்பிட்டு டேவிட் வார்னர் இந்திய அணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
|
டேவிட் வார்னர் எழுதிய கடிதம்
இந்திய அணியில் தொடர் முடித்துவிட்டு நாடு திரும்பும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் எழுதியுள்ள இந்த உருக்கமான கடிதத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "இந்திய அணியுடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாட்டுக்கு வருவது எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அன்று நடந்த தாக்குதலை மறக்க வேண்டும் என நினைக்கிறோம், இந்திய ரசிகர்கள் எப்போதுமே சிறப்பாகவே இருந்திருக்கிறார்கள். எங்களை விளையாட அழைத்ததற்கு மிக்க நன்றி. அடுத்த வருடம் சந்திக்கலாம் பாய்ஸ்'' என்று கூறியுள்ளார். இவர் எழுதிய கடிதம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.