சென்னை: ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முடக்கும் சதியின் பின்னணியில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே சென்னையில் நேற்று முன்தினம் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறுகிறது.
டோணி சந்திப்பு
சென்னையிலிருந்து மும்பைக்குப் புறப்படும் முன்பு இந்திய அணியின் கேப்டன் டோணி, சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசனை சந்தித்தார். இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனிவாசனுடன் டோணி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
சு.சுவாமி திடீர் சந்திப்பு
இதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சீனிவாசனை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடையை நீக்க நீதிமன்றத்தில் வாதாடுவேன். சென்னை அணி மீதான புகார் பின்னணியில் தாவூத் இப்ராகிமின் சதித் திட்டம் உள்ளது.
இதற்கான இ-மெயில் ஆதாரம் என்னிடம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மீது எந்த தவறும் கிடையாது. சீனிவாசன் குறித்து நீதிமன்றத்தில் பொய்யான தகவல் கூறப்பட்டு உள்ளது. சென்னை அணியை முடக்க சதி நடக்கிறது. இது தொடர்பான முக்கியமான தகவலை வருகிற 16-ந் தேதி நான் வெளியிட உள்ளேன் என்றார்.