பகலிரவு போட்டியில் இந்தியா
பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பதற்கு முன்பு பகலிரவு போட்டிகளை ஆட இந்திய அணி மறுத்து வந்தது. கடந்த 2018ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின்போதும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசத்துடனான தனது முதல் பகலிரவு பிங்க் பந்து போட்டியை இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி கொண்டது.
ஆஸ்திரேலியாவுடன் விளையாட சம்மதம்
கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி சர்வதேச ஒருநாள் தொடரில் விளையாடிய நிலையில், செய்தியாளாகளிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாட இந்தியா தயாராக உள்ளதாகவும் டெஸ்ட் போட்டிகளை எந்த வடிவத்தில் விளையாடினாலும் மகிழ்ச்சியே என்றும் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்துடன் ஒன்று
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, ஒரு பகலிரவு போட்டியில் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணியுடனும் இந்தியா பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கங்குலி அறிவிப்பு
இந்த பகலிரவு போட்டிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இதுமுதல் இந்தியாவில் பகலிரவு போட்டிகள் வழக்கமாக நடைபெறும் ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிஸ்பேன் அல்லது அடிலெய்டு
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு எதிரான பகலிரவு போட்டி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிஸ்பேன் அல்லது அடிலெய்டில் இந்த போட்டி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள இந்தியா -இங்கிலாந்து பகலிரவு போட்டி அகமதாபாத்தின் மோட்டேரா மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த சுற்றுப்பயணங்கள்
வரும் 29ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு நீண்ட ஓய்வு அளிக்கப்படும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இந்தியா மோதவுள்ள 3 டி20 போட்டித்தொடர் மற்றும் 3 சர்வதேச ஒருநாள் போட்டி தொடர் ஜூன் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஆடவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடர் ஆகஸ்டுக்கு தள்ளிப் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்வாளர்கள் 10 நாட்களில் தேர்வு
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பௌலர் சிவராமகிருஷ்ணன் விண்ணப்பத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும், அவரது பெயர் இறுதிப்பட்டியலில் உள்ளது என்றும், தேர்வாளர்களுக்கான இன்டர்வியூ நடத்தப்பட்டு இன்னும் 10 தினங்களில் புதிய தேர்வாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கங்குலி தெரிவித்தார்.