2020 ஐபிஎல்-இல் டீன் ஜோன்ஸ்
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கான வர்ணனை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளை விமர்சனம் செய்யும் டக் அவுட் என்ற நிகழ்ச்சியில் டீன் ஜோன்ஸ் முக்கிய நபராக இருந்தார்.
உடற்பயிற்சி
பிரெட் லீ, ஸ்காட் ஸ்டைரிஸ், பிரையன் லாரா உள்ளிட்டோருடன் டீன் ஜோன்ஸ் அந்த குழுவில் இடம் பெற்று இருந்தார். மற்ற ஐபிஎல் வர்ணனையாளர்களுடன் ஹோட்டல் அறையில் தங்கி இருந்தார் டீன் ஜோன்ஸ். அன்றைய தினம் அவர் உடற்பயிற்சி செய்துள்ளார்.
பிரெட் லீ முதலுதவி
உடற்பயிற்சி செய்து விட்டு சில மணி நேரம் கழித்து அவர் ஹோட்டல் லாபியில் நடந்து வரும் போது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அவர் அருகே இருந்த பிரெட் லீ அவருக்கு சிபிஆர் எனும் முதல் உதவி அளித்து நின்று போன இதயத்தை செயல்பட வைக்க கடும் முயற்சி செய்துள்ளார்.
இரங்கல்
ஆனால், அவரது முயற்சி வீணானது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட டீன் ஜோன்ஸ் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஐபிஎல்-இல் பங்கேற்றுள்ள வீரர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இரங்கல் தெரிவித்தது.
நன்றி
அவருக்கு ஜேன் ஜோன்ஸ் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஜேன் ஜோன்ஸ் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய துணை கண்டத்தில் இருந்து அவருக்கு கிடைத்த அன்பை குறிப்பிட்டு இருக்கிறார்.
அதிர்ந்து போனோம்
"இந்தியாவில் டீன் இறந்த தகவல் கேட்டு என் மகள்களும் நானும் நம்ப முடியாத அளவு அதிர்ந்து போனோம், வருத்தம் அடைந்தோம். என் அழகான கணவர், என் வாழ்வின் அன்பு, ஒவ்வொரு கணமும் தன் வாழ்வில் உற்சாகமாக இருந்தார்."
பெரிய இடைவெளி
"எங்கள் வாழ்வில் அவர் பெரிய இடைவெளியை விட்டுவிட்டு சென்றுள்ளார். அதை நிரப்பவே முடியாது. பல அற்புதமான நினைவுகளை அவர் விட்டுச் சென்றுள்ளார். இந்த சவாலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருந்து எங்களுக்கு ஆறுதல் கூறப்பட்டு வருகிறது."
இந்திய துணை கண்டம்
"டீனின் இந்திய துணை கண்டத்தின் மீதான சிறப்பான காதலை வைத்து பார்க்கும் போது, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தானில் இருந்து பேசி வருவதை கேட்க நெகிழ்ச்சியாக உள்ளது. அவரது இறப்பு செய்திக்கு கிடைத்த முக்கியத்துவத்தை கண்டு நாங்கள் திகைத்து விட்டோம்."
பிரெட் லீக்கு நன்றி
நாங்கள் எப்போதும் அதற்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். குறிப்பாக டீனை உயிருடன் வைத்திருக்க முழு மூச்சுடன் முயன்ற பிரெட் லீக்கு நன்றி கூறி, அவரது செயலை குறிப்பிட விரும்புகிறேன்" என ஜேன் ஜோன்ஸ் தன் அறிக்கையில் உருக்கமாக கூறி உள்ளார்.