பெரும் மகிழ்ச்சியில் பள்ளித்துரா
திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளித்துரா என்ற சின்ன கடலோரக் கிராமம்தான் சஞ்சுவின் சொந்த ஊராகும். இந்தக் கிராமம் சஞ்சுவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தி குஷியுடன் கொண்டாடத் தவறுவதில்லை.
கேரளத்தின் பெருமை
ஸ்ரீசாந்த்தால் ஏற்பட்ட களங்கம், சஞ்சுவால் நீங்கியதாக கேரள மக்கள் நினைக்கின்றனர். எனவே சஞ்சுவின் ஒவ்வொரு வளர்ச்சியும் அவர்களுக்கு பெரும் உவகை தருவதாக அமைந்துள்ளது.
3வது கேரள வீரர்
இநதிய அணியில் கேரள வீரர்கள் அதிகம் இடம்பெற்றதில்லை. இதற்கு முன்பு டினு யோகன்னன், ஸ்ரீசாந்த் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். தற்போது 3வது கேரள வீரராக சஞ்சு இணைந்துள்ளார்.
விக்கெட் கீப்பர் + பேட்ஸ்மேன்
அதிரடியான பேட்ஸ்மேனாக அறியப்பட்ட சஞ்சு அருமையான விக்கெட் கீப்பரும் கூட. ராகுல் டிராவிடால் இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட் ஸ்டார் என்று புகழப்பட்டவரும் கூட.
ரொம்ப சந்தோஷம்
ஊர் இளைஞர் ஒருவர் கூறுகையில், சஞ்சு அமைதியான பையன். அவரது வளர்ச்சிக்காக நாங்கள் அனைவருமே பெருமைப்படுகிறோம். கடினமான உழைப்பால் இந்த அளவுக்கு அவர் உயர்ந்துள்ளார். அவர் சிறப்பான இடத்தைப் பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்றார்.
அசத்துவார்
சஞ்சுவின் உள்ளூர் நண்பர் ஒருவர் கூறுகையில், நாங்கள் இணை பிரியா நண்பர்கள். ஜிம்பாப்வேவுக்குப் புறப்பட்டுச் செல்லும்போதே இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சஞ்சு இருந்தார். அருமையான மனிதர். சிறப்பாக ஆடுவார் என்றார்.
அம்மா, அப்பா, அண்ணன் கொல்லத்தில்
நேற்று சஞ்சு முதல் போட்டியில் ஆடிய சமயத்தில் அவரது பெற்றோரும், அண்ணனும் ஊரில் இல்லை. கொல்லம் போயிருந்தனர். அங்கு சஞ்சுவுக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயுடுவால் கிடைத்த இடம்
இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அம்பட்டி ராயுடு காயம் காரணமாக பாதியிலேயே விலக நேரிட்டதால் சஞ்சுவுக்கு அணியில் இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி விஜய்யிடமிருந்து கேப்
நேற்று சஞ்சு போட்டியில் அறிமுகமானபோது அவருக்கான இந்திய அணியின் தொப்பியை தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், சஞ்சுவிடம் கொடுத்து வரவேற்றார்.
2வது முறையாக
சஞ்சு சாம்சன் 2வது முறையாக இந்திய அணிக்குள் வந்துள்ளார். முன்பு கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்றுதான் முதல் முறையாக இந்திய அணிக்காக அவர் ஆடியுள்ளார்.