நடைபெறுவதில் சிக்கல்
டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால், அனைத்து விளையாட்டு போட்டிகளும் முடங்கியுள்ள நிலையில், தற்போது இந்த போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்றும், அடுத்த ஆண்டு நடத்த அனுமதிக்கவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் நடைபெறுமா?
கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளும் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்திக் கொள்ள பிசிசிஐ காத்திருக்கிறது. ஐபிஎல் நடத்தப்படவில்லை என்றால் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை முடிவு தள்ளிவைப்பு
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐசிசி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டி20 உலக கோப்பை தொடரை தள்ளி வைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை தற்போது ஐசிசி நிர்வாகிகள் ஜூன் 10ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனால், டி20 உலக கோப்பை குறித்த முடிவு மேலும் தள்ளிப் போயுள்ளது.
ஆராய ஐசிசி வலியுறுத்தல்
இதனிடையே டி20 உலக கோப்பை குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய நிர்வாகக்குழுவினரை ஐசிசி பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் ஆராய வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, இந்தியா -ஆஸ்திரேலியா தொடர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொடரை நடத்த இயலும் போது ஏன் டி20 உலக கோப்பையை ஆஸ்திரேலியா நடத்த முடியாது என்றும் கேள்வி எழுந்துள்ளது.
நிலைமையை சரிசெய்ய திட்டம்
ஆனால் 16 அணிகளை கொண்டு ஒரு மாதத்திற்கு நடத்தப்படும் டி20 உலக கோப்பை தொடரை காட்டிலும், இரு நாட்டு அணிகளை கொண்டு நடத்தப்படும் தொடர்களை கொண்டு கல்லா கட்ட முடியும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கருதுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா தற்போது நிதி நிலைமையை சரிசெய்யும் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.