ஐசிசி ஆலோசனை
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, இந்த தொடரை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த தொடர் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஐசிசி இந்த முடிவை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
அருண் துமால் அதிருப்தி
டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் ஐசிசியின் முடிவை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாதத்திற்கு இந்த முடிவை ஐசிசி ஒத்திவைத்துள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் உள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
25 சதவிகித ரசிகர்கள் அனுமதி
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் 25 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். இதையடுத்து இந்த ஆண்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் டி20 உலக கோப்பை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அங்கு அதிகரித்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவெடுக்க வேண்டும்
இதனிடையே, டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாதான் இறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ஆஜ் தக் சேனலுக்கு பேட்டியளித்த அவர், இந்த விவகாரத்தில் நிதி நிலைமையையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
முடிவு மிகவும் கடினமானது
நிதி நிலைமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு டி20 உலக கோப்பை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த முடிவு மிகவும் கடினமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கிரிக்கெட் நடைபெறவேண்டும் என்றும் அதன் முன்னால் மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வரும் ஜூலை 8ம் தேதி துவங்கவுள்ள இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் தொடருக்கும் அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.