இலங்கை சுற்றுப்பயணம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. அதன் பிறகு ஆக.4ம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அதே வேளையில் ஜூலை மாதத்தில் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய 'பி' அணி பங்கேற்கவுள்ளது. ஜூலை 13ம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.
தீபக் சஹாருக்கு வாய்ப்பு
இதற்கான இந்திய அணியில் இந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என கடும் போட்டி இருப்பதால் தீபக் சஹாருக்கு அவ்வளவாக சர்வதேச போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கான மிகப்பெரும் வாய்ப்பாக இலங்கை தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான் தயார்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தீபக் சஹார், நான் இலங்கை தொடருக்கு தயாராக உள்ளேன். ஐபிஎல்-ல் நன்றாக பந்துவீசியுள்ளேன். அதே ஃபார்ம் என்னிடம் அப்படியே உள்ளது. என்னைப் பொறுத்தவரை அனுபவம் நல்ல தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்தவகையில் என்னிடம் தற்போது நல்ல அனுபவம் உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். அதே போல இந்திய 'ஏ' அணியும் மெயின் அணியை போலவே பலமாக உள்ளதால் நிச்சயம் தொடரை கைப்பற்றும்.
தோனியே காரணம்
என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு தோனியே காரணம். தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவரின் கேப்டன்சியில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவரின் வழிகாட்டுதல்களால் என்னுடைய ஆட்டம் வேறு கட்டத்திற்கு சென்றுவிட்டது. ஆட்டத்தில் எப்படி பொறுப்பை சுமந்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார்.
தோனி கொடுத்த வாய்ப்பு
சிஎஸ்கே அணியில் எந்தவொரு பவுலரும் பவர் ப்ளேவில் 3 ஓவர்களை வீசியதில்லை. ஆனால் அந்த வாய்ப்பை என்னை நம்பி தோனி கொடுத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவது என்பது கடினமான வேலை. ஆனால் தோனியின் வழிகாட்டுதல்களால் முதல் ஓவர்களில் எப்படி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நன்றாக கற்றுக்கொண்டேன் எனக்கூறியுள்ளார்.