துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கி சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இதில், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டது டெல்லி கேபிட்டல்ஸ்.
ஐபிஎல் தொடரில், நேற்று (செப்.22) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.
இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பு சன்ரைசர்ஸ் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இதனால் ஒரு முக்கிய சரிவுக்கு பிறகு களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 3 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரிதிமான் 18 ரன்களில் அவுட்டானார். பிறகு கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்களிலும், 11 கோடிகள் கொட்டிக் கொடுத்து வாங்கப்பட்ட மனீஷ் பாண்டே 17 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். பிறகு களமிறங்கிய கேதர் ஜாதவ் 3 ரன்களில் சரண்டராக, 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அப்துல் சமத் ஓரளவுக்கு போராடி 28 ரன்கள் அடித்தார். இவர் தான் ஹைதராபாத் அணியில் அதிகம் ரன் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ரஷீத் கான் 22 ரன்கள் எடுத்து கொஞ்சம் சப்போர்ட் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், நோர்ட்ஜே, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ப்ரித்வி ஷா 11 ரன்களில் அவுட்டானாலும், ஷிகர் தவான் 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து பக்காவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் 422 ரன்களுடன் ஐபிஎல் தொடரில் மீண்டும் 'ஆரஞ்சு கேப்'-ஐ கைப்பற்றினார் தவான். ஆனால், இவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், காயத்துக்கு பிறகு மீண்டும் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களுடனும், கேப்டன் ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 35 ரன்களும் குவித்து 17.5வது ஓவரிலேயே அணியை வெற்றிப் பெற வைத்தனர்.
இதன் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அதே சமயம், தங்களது 8வது போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7வது தோல்வியை பதிவு செய்தது. இதனால் வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணியில் ஆக்ரோஷம் இல்லை, இன்டென்ட் இல்லை, வெற்றிப் பெறுவதற்கான வியூகமும் எடுபடவில்லை. அவர்களுக்கான மொமண்டமும் கிடைக்கவில்லை. இதனால், எந்தவித எதிர்ப்புமின்றி டோட்டலாக அந்த அணி டெல்லியிடம் சரண்டரானது. ஹைதராபாத் கைவசம் இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. இதில் அனைத்து போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் முன்னேறுவது கடினமே.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
டெல்லி கேபிட்டல்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த 2020 சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. ஆனால், மும்பைக்கு நிகராக விளையாட முடியாமல் கோப்பையை தவறவிட்டது. எனினும், இந்த சீசனில் இன்னும் வலிமையாக எழுந்து, தற்போது 9 போட்டிகளில் விளையாடி அதில் 7ல் வெற்றிப் பெற்று முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு மற்றும் ராயல்ஸ் என இரு அணிகளிடம் மற்றும் டெல்லி தோற்றிருக்கிறது. இந்நிலையில், இன்னும் ஒரு போட்டியில் வெற்றிப் பெற்று விட்டால், அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். கைவசம் இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ள நிலையில், முதல் அணியாக ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்ததாக வரும் 25ம் தேதி டெல்லி அணி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. அதில் வென்றுவிட்டால், பிளே ஆஃப் ஸ்பாட் உறுதி. அதேபோல், தற்போது 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்னும் 2 போட்டிகளில் வெற்றிப் பெற்றால் பிளே ஆஃப் முன்னேறிவிடும்.