விசாகப்பட்டினம்:ஐபிஎல் குவாலிபயர் 2 போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சில் சிக்கி திணறிய டெல்லி அணி, ஒரு வழியாக 147 ரன்களை எடுத்திருக்கிறது.
இறுதிச்சுற்றுக்குச் செல்லும் குவாலிபயர் 2 சுற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்கிசும், டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து பேட் செய்த டெல்லி தொடக்கத்தில் அதிரடியாக ஆட தொடங்கியது. ஆனால், 3வது ஓவரில் பிரித்வி ஷா ஆட்டமிழந்த போது அணியின் நிலைமை தலைகீழானது. பின்னர், தவானும், முன்ரோவும் கை கோர்த்தனர்.
தவான், ஹர்பஜன் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுக்க, முன்ரோவுடன், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டார். முன்ரோவும் 27 ரன்களில் வெளியேறினார். கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அசராமல் நின்றார் ரிஷப் பன்ட். 3 ரன்களில் அக்சர் படேல், 10 ரன்களில் ரூதர்போர்டு ஆகியோரும் பெவிலியன் திரும்பினர். கீமோ பால் 3 ரன்களில் அவுட்டாக, இறுதி கட்டத்தில் அடித்து ஆட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ரிஷப் பன்ட் 38 ரன்களில் வீழ்ந்தார்.
விடாமல் துரத்தும் மேட்ச் பிக்சிங்.. ஜோய்சா, குணவர்த்தனேவுக்கு ஐசிசி நோட்டீஸ்.. நெருக்கடியில் இலங்கை
ஒரு வழியாக, 20வது ஓவரில் டெல்லி அணிக்கு 16 ரன்கள் கிடைக்க 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிரடியான ரன்குவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை அணியில் பந்துவீச்சில் சிக்கி டெல்லி அணி சின்னாபின்னமானது.