இந்திய அணி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஓப்பனிங்கிற்காக ரோகித் சர்மா, ஷிக்கர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாருக்கு வாய்ப்பு
இவர்கள் மூவரில் யாருக்கு ஓப்பனிங்கில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற குழப்பம் எழுந்துள்ளது. ரோகித் சர்மா ஃபுல் ஃபார்மில் உள்ளதால் அவருக்கான இடம் கண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் ஷிகர் தவான் விஜய் ஹசாரே ட்ராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் கே.எல்.ராகுலும் டி20 போட்டிகளிலும் தொடர்ந்து நல்ல ஃபார்மில் உள்ளார். இதனால் இவர்கள் இருவர்களுக்கான போட்டி அதிகரித்துள்ளது.
இவருக்குதான் வாய்ப்பு
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் தேவங் காந்தி, வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரே ஓப்பனிங் களமிறங்குவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் ஷிகர் தவானுக்கு ஒரு நாள் போட்டியில் வேண்டுமானாலும் வாய்ப்பளிக்கப்படலாம், ஆனால் டி20 போட்டியில் ரிசர்வ் ப்ளேயர்தான் எனக்கூறியுள்ளார்.
ஏன் ராகுல்?
கடந்த ஒரு வருட காலமாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் டி20 போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை தந்துள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுல் தான் தொடரின் அதிக ரன்கள் அடித்த வீரர் ஆவார். அதே போல நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவும் முக்கிய காரணமாய் இருந்துள்ளார் என தேவங் காந்தி காரணம் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்ய குமார் யாதவ், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டதற்கு தேவங் காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில் அவர், சூர்யகுமார் யாதவ் ஒரு சிறந்த வீரர். அவரை உலகக்கோப்பை டி20க்கு பயன்படுத்த விரும்பினால், அவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகளை தர வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.