அர்ஜுனா விருதுக்கான பரிந்துரை
இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கான பரிந்துரைப் பட்டியலை பிசிசிஐ தயாரித்து வருவதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. இந்த முறை ஆடவர் அணியில் இருந்து இரண்டு வீரர்கள், மகளிர் அணியில் இருந்து இரு வீராங்கனைகள் பெயரை பரிந்துரை செய்ய உள்ளது பிசிசிஐ.
மகளிர் அணி
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷிகா பாண்டே மற்றும் தீப்தி சர்மா பெயரை மகளிர் அணி சார்பாக பரிந்துரை செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரோடு இன்னும் ஒரு வீராங்கனை பெயரையும் கூட பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
விருது கிடைக்காத இருவர்
அடுத்து ஆடவர் அணியில் கடந்த ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்காத இருவர் பெயரை பிசிசிஐ மீண்டும் பரிந்துரை செய்ய உள்ளதாக கூறப்பட்டது. அவர்கள் இளம் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் அனுபவ பேட்ஸ்மேன் ஷிகர் தவான்.
தவானுக்கு கிடைக்கவில்லை
தவான் பெயர் கடந்த 2018ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. அப்போது ஆடவர் அணியில் இருந்து அவர் பெயரும், மகளிர் அணியில் இருந்து ஸ்மிருதி மந்தனா பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அப்போது தவானுக்கு விருது கிடைக்கவில்லை. மந்தனா மட்டுமே வென்றார்.
பும்ராவுக்கு தகுதி இல்லை
அதற்கு அடுத்த 2019ஆம் ஆண்டு ஆடவர் அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா என மூவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே வென்றார். பும்ரா மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி இருக்காத காரணத்தால் விருது வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
மீண்டும் அனுப்ப முடிவு
இந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ஷிகர் தவான், பும்ரா பெயரை அர்ஜுனா விருது பரிந்துரைப் பட்டியலுக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இவர்களில் யாருக்கு விருது வழங்குவது என்பதை அதற்கான குழு தீர்மானிக்கும். அதில் பிசிசிஐ தலையிட முடியாது.
முன்னணி வீரர் பும்ரா
இவர்களில் பும்ரா கடந்த மூன்று ஆண்டுகளிலும் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை செய்துள்ளார். பும்ரா ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் முன்னணி வீரராக வலம் வருகிறார். இந்த நிலையில், அவருக்கே அர்ஜுனா விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அனுபவ தவான்
ஷிகர் தவான் கடந்த ஆண்டில் பெரிய சாதனைகள் ஏதும் செய்யவில்லை. எனினும், அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக பல ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி சிறப்பாக ரன் குவித்துள்ளார். அதன் அடிப்படையில், அவரது அனுபவத்தை கணக்கில் கொண்டு மட்டுமே அவருக்கு இந்த ஆண்டு அர்ஜுனா விருது வழங்க முடியும்.
பும்ராவுக்கு வாய்ப்பு
ஆனால், பும்ரா - ஷிகர் தவான் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் பும்ராவுக்கே விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தவான் இன்னும் ஒரீரு ஆண்டுகள் மட்டுமே இந்திய அணியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு இனி அர்ஜுனா விருது வெல்லும் வாய்ப்பும் கிடைக்காது.
தவானுக்கு சிக்கல்
பிசிசிஐ எப்படியாவது கிரிக்கெட்டுக்கு ஆடவர் பிரிவில் ஒரு விருது கிடைத்து விட வேண்டும் என்ற நோக்கில் பும்ரா பெயரை சேர்த்து, தவானுக்கு சிக்கலை உண்டாக்கி உள்ளது. தற்போது இந்திய அணியில் ஆடும் மூத்த வீரர்களில் பலருக்கு அர்ஜுனா விருது கிடைத்து விட்டது. இன்னும் ஷிகர் தவானுக்கு மட்டுமே கிடைக்கவில்லை. இந்த ஆண்டும் அவருக்கு அர்ஜுனா விருது கிடைக்காமல் போனால் இனி அவருக்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லாத நிலை ஏற்படும்.