சிஎஸ்கே அணி தோல்விகள்
2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அதன் பின் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது.
சிக்கல்கள்
சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாததால் பேட்டிங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு அடுத்த இரண்டு போட்டிகளில் ஆட வில்லை. துவக்க வீரர்களும் மிக நிதானமாக ரன் சேர்த்து அடுத்து வரும் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தோனி பேட்டிங்
இதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது தோனியின் பேட்டிங் ஆர்டர் தான். அவர் நான்காம் வரிசையில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்த்த அனைவரும், அவர் ஏழாம் வரிசையில் இறங்கி ரன் குவிக்க முடியாமல் திணறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரெட் லீ என்ன சொன்னார்?
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ, சிஎஸ்கே அணி வெற்றி பெறத் துவங்க வேண்டும். அவர்களிடம் சரியான அணி உள்ளது. ஆனால், சரியான இடத்தில் வீரர்கள் ஆடவில்லை. தோனியின் பேட்டிங் வரிசை குறித்த பேச்சு மொத்த அணிக்கும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது என்றார்.
சரி செய்ய வேண்டும்
தோனி தன் பேட்டிங் வரிசை மட்டுமின்றி ஆறு பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யவும் திட்டமிட வேண்டும். அதே போல, அம்பதி ராயுடு அணியில் ஆட வைக்க வேண்டும். அவர் காயத்தில் இருந்தால் தோனி தானே பேட்டிங் ஆர்டரில் முன்னேறி ஆட வேண்டும்.