த்ரில் வெற்றி
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் மும்பை அணி நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.062. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதியாகும். தொடரின் முதல் பாதியில், சென்னை அணியை மும்பை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை நிர்ணயித்த 218 ரன்கள் இலக்கை கடைசி ஓவர், கடைசி பந்தில் எட்டிப் பிடித்து வென்றது மும்பை. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா கடுமையாக பரவ, இதனால் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட, அந்த களேபரத்துக்கு மத்தியில், இந்த மரண அடி தோல்வி அதிகம் கவனம் பெறாமல் போனது.
டெல்லி கேபிட்டல்ஸ்
எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிடலாம். இந்த சூழலில் தான் இந்த இரண்டாம் பகுதியில் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது சென்னை.
தோனி பேட்டிங்
கடந்த 2020 சீசனிலும் சரி.. இந்த சீசனிலும் சரி.. சென்னை அணியின் ஒரே சொதப்பல் தோனியின் பேட்டிங் மட்டும் தான். கடந்த சீசனில் ஆர்ம்ஸ்களை கடுமையாக ஏற்றி வந்து, ரெஸ்ட்லிங் வீரரைப் போல, புஜபலம் காட்டி நின்ற தோனியால், பேட்டிங்கில் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் களமிறங்கிய முக்கிய போட்டிகள் அனைத்திலும், துளி கூட பந்தை எதிர்கொள்ள முடியாமல், கடைசி வரை நின்று அணியை தோல்வியடைய வைத்தார், அல்லது தோற்கச் செய்தார் என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்று விட்டதால், அவரால் சரிவர பந்துகளை கனெக்ட் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
மறைக்கப்பட்ட பேட்டிங் குறை
இந்த சீசனிலும் அவர் அதே மாதிரி தான் தடுமாறினார். அதே 'கனெக்ட்' ப்ராப்ளம் தான். 2008 முதல் ஐபிஎல்-ல் விளையாடி வரும் தோனி, சென்னை அணிக்காக ஒவ்வொரு ஆண்டும் அற்புதமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தினார். ஆனால், மஞ்சள் ஜெர்ஸியில் அவர் சொதப்பிய ஒரே சீசன் கடந்த 2020 சீசன் தான். 14 போட்டிகளில் விளையாடி வெறும் 200 ரன்களே அவர் எடுத்தார். அதனால், சென்னை அணி பிளே ஆஃப் முன்னேற முடியாமல் தொடரை விட்டே வெளியேறிவிட்டது. இந்த சீசனில் அவர் சொதப்பினாலும், டு பிளசிஸ், ராயுடு, ருதுராஜ், சாம் கர்ரன், ஜடேஜா என்று மற்றவர்கள் மிளிர்ந்ததால், வெற்றிகள் அடுத்தடுத்து வசப்பட, தோனியின் பேட்டிங் குறை மறைக்கப்பட்டது. 7 போட்டிகளில் விளையாடியிருக்கும் தோனி 37 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், இப்போது மீண்டும் அவர் சொதப்பிய அதே அமீரக ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
5000 ரன்கள்
இம்முறை தோனி நிச்சயம் தப்பிக்க முடியாது. ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்துவது, ஒரு விக்கெட் கீப்பராக திறமையாக செய்லபடுவது, 40 வயதிலும் ஒரு பெஸ்ட் ரன்னராக, ஃபிட்டான வீரராக இருப்பது என்பதெல்லாம் ஓகே. ஆனால், இம்முறை பேட்டிங்கில் அவர் ஜோலித்தே ஆக வேண்டும். அது தோனிக்கும் தெரிந்திருக்குதோ என்னவோ, இம்முறை கடுமையான பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளாராம். அதாவது, ஒருநாளைக்கு 3-4 மணி நேரம் பேட்டிங்கிற்கு என்று மட்டும் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கம்பீர் உட்பட பல சீனியர் வீரர்கள், தோனியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அணியின் வெற்றிக்காக தனது பேட்டிங்கை கடுமையாக இம்ப்ரூவ் செய்யும் முயற்சியில் உள்ளாராம் தோனி. இன்னும் 331 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்களை தோனி கடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.