கேரி கிர்ஸ்டன்
2007இல் தோனி கேப்டனாக பதவி ஏற்றார். 2007 டி20 உலகக்கோப்பை வென்றார். அதன் பின் சில மாதங்கள் கழித்து கேரி கிர்ஸ்டன் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின் இந்திய அணி தொடர்ந்து முன்னேறி வந்தது.
உலகக்கோப்பை தொடருக்கு முன்
அப்போது தோனி கேப்டனாக எப்படி தன் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எந்த அளவுக்கு விசுவாசமாக, உண்மையாக நடந்து கொண்டார் என கேரி கிர்ஸ்டன் கூறினார். இந்த சம்பவம் 2011 உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்தது.
அழைப்பு
2011 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டு வந்தது. அப்போது அந்த நகரில் இருந்த விமான பள்ளி ஒன்று இந்திய அணியை அழைத்து இருந்தது. விமானங்களை குறித்து நேரடியாக அறிந்து கொள்ள இந்திய அணி ஆர்வமாக இருந்தது.
அனுமதி இல்லை
ஆனால், அங்கே கிளம்பும் முன் பாதுகாப்பு கருதி வெளிநாட்டினருக்கு விமான பள்ளியின் உள்ளே அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் கேரி கிர்ஸ்டன், பேடி அப்டன், எரிக் சிம்மன்ஸ் ஆகியோர் இருந்தனர்.
அதிரடி முடிவு
அதைக் கேட்ட உடன் கேப்டன் தோனி அதிரடியாக ஒரு முடிவு எடுத்துள்ளார். அவர்கள் வெளிநாட்டினர் என்றாலும் என் அணியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இடம் இல்லை என்றால் நாம் யாருமே போக வேண்டாம் என கூறி இருக்கிறார்.
ஈர்க்கக்கூடிய நபர்
உடனடியாக அந்த நிகழ்ச்சியை இந்திய அணி ரத்து செய்தது. அதைப் பற்றி குறிப்பிட்ட கேரி கிர்ஸ்டன், நான் பார்த்ததில் தோனி அதிகமாக ஈர்க்கக்கூடிய நபர். அவர் பெரிய தலைவர், தலைவராக நல்ல இருப்பை கொண்டவர். ஆனால், அவர் விசுவாசமானவர். அதுதான் மிக முக்கியமானது என்றார்.
யாருமே போகப் போவதில்லை
"அவர்கள் என் மக்கள், அவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் நாம் யாருமே போகப் போவதில்லை" என அவர் கூறினார். அதுதான் தோனி. அவர் என்னிடம் விசுவாசமாக நடந்து கொண்டார். நானும் அப்படி இருப்பதாகவே அவர் பார்த்தார் என்றார் கேரி கிர்ஸ்டன்.
தனியாக அமர்ந்து பேசுவோம்
நாங்கள் எப்போதும் போட்டிகளை வென்றதில்லை. சில கடினமான சமயமும் இருந்தது. நாங்கள் அப்போது இருவரும் தனியாக அமர்ந்து பேசுவோம். அணியை எப்படி வழிநடத்தி செல்லலாம் என விவாதிப்போம். அந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் வலுவான உறவை வளர்த்துக் கொண்டோம் என்றார் கேரி கிர்ஸ்டன்.
அம்பதி ராயுடு
தோனி இதே போன்று அம்பதி ராயுடு எடுத்து வந்த உணவை அனுமதிக்க மறுத்த ஹைதராபாத் ஹோட்டல் ஒன்றில் இருந்து இந்திய அணியை வெளியேறச் செய்ததும் குறிப்பிடத்தக்கது. தோனியின் இந்த அணி விசுவாசம் தான் அவரது வெற்றிகளுக்கு காரணம் என்கிறார் கிர்ஸ்டன்.