லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருதினப் போட்டியின்போது, ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்கள் கடந்த 4வது இந்தியர், 12வது வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் தோனி பெற்றார்.
இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இதில் முதலில் நடந்த டி-20 போட்டித் தொடரில் 2-1 என தொடரை இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து மூன்று ஒருதினப் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இன்று இரண்டாவது போட்டி நடந்தது.
320வது ஒருதினப் போட்டியில் விளையாடும் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி 33 ரன்களை எடுத்தபோது, ஒருதினப் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த சாதனையைப் புரிந்தார்.
இதுவரை 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் மட்டுமே, ஒருதினப் போட்டிகளில், 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் தோனி சேர்ந்துள்ளார்.
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் தான், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராவார். அவர் 463 போட்டிகளில், 18,426 ரன்களை எடுத்துள்ளார். வங்கப் புலி சவுரவ் கங்குலி 311 போட்டிகளில் 11,363 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிட் 344 போட்டிகளில், 10,889 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கையின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சனத் ஜெயசூர்யா, இலங்கையின் மகேல ஜெயவர்த்தனே, பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக், தென்னாப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா, இலங்கையின் திலகரத்னே தில்ஷான் ஆகியோர் மட்டுமே இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர்.