தோனி ஓய்வு முடிவு
2019 உலகக்கோப்பை தான் தோனியின் கடைசி சர்வதேச தொடர். அதன் பின் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று கடந்த ஓராண்டாகவே கூறப்பட்டு வந்தது. ஆனால், உலகக்கோப்பை முடிந்த பின் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை.
கோலி முடிவு என்ன?
தோனி ஓய்வு பெற்றாலும், இல்லாவிட்டாலும் கேப்டன் கோலி தன் அணியில் அவரை தேர்வு செய்ய மாட்டார் என்றே கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தோனி விலகியதன் பின்னணியிலும் இந்த காரணம் தான் கூறப்படுகிறது.
தள்ளிப் போடும் தோனி
தோனிக்கு வயதாகி விட்டது. அதிகபட்சம் போனால் அவர் இன்னும் ஓராண்டு வரை கிரிக்கெட் ஆட முடியும். ஆனால், தொடர்ந்து விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கிடையே, அணியில் இடமில்லை என்றாலும் தோனி ஏன் தன் ஓய்வு முடிவை தள்ளிப் போடுகிறார் என்று புரியாமல் இருந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.
காரணம் இது தான்
வரும் அக்டோபர் 22 அன்று பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பின் கிரிக்கெட் போர்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுயமாக செயல்படும். அப்போது தோனிக்கு சாதகமான சூழல் ஏற்படலாம் என்கிறது பிசிசிஐ வட்டாரம்.
காட்சிகள் மாறும்
பிசிசிஐ தேர்தலுக்கு பின் தேர்வுக் குழு முதல் அனைத்தும் மாறி விடும். தற்போது இருக்கும் தேர்வுக் குழு விராட் கோலிக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், புதிதாக வரும் தேர்வுக் குழு தோனிக்கு ஆதரவாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. பிசிசிஐ தேர்தலுக்கு பின், அங்கே நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அணியில் மாற்றம் இருந்தாலும் இருக்கலாம்.
டி20 உலகக்கோப்பை
அப்போது தோனிக்கு சாதகமான நிலை ஏற்பட்டால், குறைந்தபட்சம் டி20 உலகக்கோப்பை வரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். அதற்குத் தான் தோனி காத்துக் கொண்டு இருக்கிறார் என்கிறரார்கள். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.