ரூ.1800
கடந்த சில நாட்களுக்கு முன் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அமைப்பு வருடாந்திர கணக்குகளை முடித்து வெளியிட்டது. அதில் ஒரு இடத்தில் தோனியிடம் இருந்து வரவேண்டிய ரூ.1800 பணம் பாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
தோனி ரசிகர்கள் செய்த காரியம்
இதைக் கண்ட சிலர் இது தோனியை அவமானப்படுத்துவதாக கூறினர். சில பள்ளி சிறுவர்கள் மற்றும் தீவிர தோனி ரசிகர்கள் அந்த தொகையை திரட்டி ஜார்கண்ட் மாநில அமைப்பின் பெயரில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுக்க வந்தனர். அதனால், பரபரப்பு எழுந்தது.
நிர்வாகம் மறுப்பு
முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜார்கண்ட் கிரிக்கெட் நிர்வாகம் மீது பல்வேறு விமர்சனத்தை வைத்தவருமான சேஷ் நாத் பாதக் என்பவர் தான் அந்த பணத்தை செலுத்த முயன்றுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்துள்ளது நிர்வாகம். அதற்கான காரணத்தையும் கூறவில்லை.
சர்ச்சை
இது குறித்து ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அமைப்பு செயலாளர் சஞ்சய் சஹாய் கூறுகையில், அவர்கள் தோனியின் அனுமதியுடன் அளித்தால் அதை வாங்குவோம் என்றார். அதே சமயம், தோனி இன்னும் அந்தத் தொகையை செலுத்தவில்லையா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
வாழ்நாள் உறுப்பினர்
என்ன தான் நடந்தது? கடந்த ஆண்டு தோனியை கௌரவ உறுப்பினராக ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் அமைப்பில் நியமிப்பது பற்றி நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. சிலர் வாழ்நாள் உறுப்பினர் பதவி அளிப்பது தான் அவருக்கு உரிய மரியாதை என கூறினர்.
இல்லத்தில் சந்தித்தனர்
இதை அடுத்து தோனிக்கு வாழ்நாள் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. அதற்கு அவர் ரூ.10,000 செலுத்த வேண்டும். அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி ரூ.1800. தோனிக்கு பதவி அளித்த பின்னர் நிர்வாகிகள் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து அந்த தகவலைக் கூறி உறுப்பினர் தொகையை பெற்றுள்ளனர்.
11,800 பெற்று இருக்க வேண்டும்
அப்போது அவர்கள் 11,800 ரூபாயை பெற்று இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் 10,000 ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால், கணக்கில் மீதமுள்ள ரூ.1800 ஜிஎஸ்டி தொகை பெறப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது தோனியிடம் இருந்து வர வேண்டிய பாக்கித் தொகையாக காட்டப்படுகிறது.
தோனிக்கு தெரியுமா?
இந்த சிறிய தொகையை தோனி வேண்டும் என்றே செலுத்தாமல் இருக்கவில்லை. கிரிக்கெட் அமைப்பு அதை அவரிடம் முன்பே தெரிவித்ததா? என்பதும் கேள்விக் குறியே. இந்த நிலையில்தான், அந்த சிறிய தொகை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செலுத்தி விட்டாரா?
மார்ச் இறுதியில் கணக்கு முடிக்கப்பட்டு அப்போதைய நிலையில் தோனி செலுத்தவில்லை என்பது மட்டுமே கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மார்க் 31க்கு பின் எப்போது வேண்டுமானாலும் அந்த தொகையை செலுத்தி இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
தோனி என்ன செய்கிறார்?
சொந்த ஊரில் தன்னை வைத்து கேலிக்கூத்து நடந்து வரும் நிலையில், தோனி 2020 ஐபிஎல் தொடருக்காக துபாயில் தயார் ஆகி வருகிறார். சிஎஸ்கே அணியில் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாத நிலையில் அணியை வழிநடத்த திட்டமிட்டு வரும் தோனி, தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.