தோனி விடுப்பு
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி இரண்டு மாதங்கள் விடுப்பில் சென்றார். அதன் பின்பும் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்திய அணி ரிஷப் பண்ட்டை முக்கிய விக்கெட் கீப்பராக ஆட வைத்தது.
பதில் சொல்ல மறுத்த பிசிசிஐ
தோனியை ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்பது பற்றி பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அப்போதைய தேர்வுக் குழு தலைவர் எம்ஸ்கே பிரசாத் தாங்கள் தோனியை தாண்டி வந்துவிட்டோம் என்று பூடகமாக கூறினார்.
பிசிசிஐ ஒப்பந்தம்
அதன் பின் ஜனவரி மாதம் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி பெயர் நீக்கப்பட்டது. அப்போது தோனி விரைவில் ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்ற வதந்தி பரவியது. ஆனால், அதே நாளில் தோனி கிரிக்கெட் பயிற்சி செய்யத் துவங்கினார்.
ஐபிஎல் பயிற்சி செய்த தோனி
ஐபிஎல்-லுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்ட தோனி, மார்ச் 2 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்து அதிரடி பயிற்சிகளை மேற்கொண்டார். பயிற்சியில் அவர் தீவிரமாக இருப்பதை பார்த்த பலரும் அவர் ஐபிஎல் மூலம் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்கிறார் என்றார்கள்.
நீடித்த குழப்பம்
ஆனாலும், குழப்பம் நீடித்தது. இதன் இடையே கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தடைப்பட்டுள்ள நிலையில், தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. தோனி இந்திய அணியில் ஆட வாய்ப்பு உள்ளதா? என பலரும் விவாதித்து வருகின்றனர்.
பிரசாத் விளக்கம்
இந்த நிலையில் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தோனி இந்திய அணியில் இடம் பெறாதது பற்றியும், இனிமேல் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். தோனி தாமாகவே சில காலம் விளையாட வேண்டாம் என்ற முடிவில் இருந்ததாக அவர் கூறி உள்ளார்.
தோனி விளையாட விரும்பவில்லை
நான் மிக மிக தெளிவாக கூறுகிறேன். நாங்கள் தோனியுடன் பேசினோம். அவர் சிறிது காலத்திற்கு விளையாட விரும்பவில்லை. அதனால், நாங்கள் அவரை விட்டு விலகி ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தோம். பண்ட்டை தொடர்ந்து ஆதரித்தோம் என்றார் பிரசாத்.
இனி வருவது கடினம்
தற்போது பண்ட்டுக்கு பின் வந்த கேஎல் ராகுல் குறைந்த ஓவர் போட்டிகளில்; சிறப்பாக கீப்பிங் செய்து வருகிறார். ஐபிஎல் நடந்து, அதில் தோனி சிறப்பாக ஆடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இப்போது தோனி நிலை சவாலான விஷயமாக மாறி உள்ளது என்றார் பிரசாத்.
தோனி மனதில் என்ன உள்ளது?
தோனி மீண்டும் இந்திய அணிக்கு வர நினைக்கிறாரா? அல்லது 2020 ஐபிஎல் தொடருடன் தன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள எண்ணுகிறாரா? என்பதே விடை தெரியாத கேள்வியாக உள்ளது. ஐபிஎல் நடக்காத பட்சத்தில் தோனி இந்திய அணியில் இடம் பெறுவது கடினம்.