தோனி ஓய்வு குழப்பம்
தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இதுவரை ஓய்வு பற்றி வாய் திறக்கவில்லை. ஜார்கண்ட் கிரிக்கெட் வட்டாரத்தில் தோனி மீண்டும் இந்திய அணியில் ஆட உள்ளதாகவே கூறப்பட்டு வருகிறது.
நீண்ட விடுப்பு
உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி நீண்ட விடுப்பில் இருக்கிறார். தோனி விடுப்பு எடுத்துக் கொண்டார் என்ற தகவல் பிசிசிஐ அதிகாரிகள் மூலமாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தான் இதுவரை வெளியாகி உள்ளது.
தோனிக்கு காயமா?
சிலர் தோனிக்கு ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரின் போது காயம் ஏற்பட்டது. அதனால் தான் ஓய்வில் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், பிசிசிஐ வெளிப்படையாகவே தோனி குறித்து அணித் தேர்வில் சிந்திக்கவில்லை என கூறி அதிர வைத்தது.
ஒதுக்கி வைத்த பிசிசிஐ
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் அணித் தேர்வின் போது ஊடகத்திடம் பேசிய தேர்வுக் குழு தலைவர் பிரசாத், தோனி பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் என இளம் வீரர்களை நோக்கி சென்று விட்டோம் என வெளிப்படையாகவே கூறினார்.
திடீர் பயிற்சி
இந்த நிலையில் தான், தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியானது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் முதன் முறையாக தோனி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.
|
பரவிய தகவல்
அந்த வீடியோ இணையத்தில் பரவியது. சில தோனி ரசிகர்கள், அவர் மீண்டும் இந்திய அணியில் இணைய இருப்பதால் பயிற்சி செய்கிறார் என்ற தகவலை பரப்பி வந்தனர். இந்திய அணி டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஆட இருப்பதால், தோனி அப்போது மீண்டும் அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதிகாரி விளக்கம்
இந்த நிலையில் தான் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பதிலில், தோனி வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஆடப் போவதில்லை என கூறி இருக்கிறார்.
ரசிகர்கள் ஏமாற்றம்
இந்த தகவலை அடுத்து தோனி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த தொடரிலும் தோனி பங்கேற்காவிட்டால், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலாவது பங்கேற்பாரா? என விடை தெரியாமல் காத்திருக்கின்றனர்.
சிஎஸ்கே உறுதி
தோனி இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவது இனி கடினம் தான். எனினும், அவர் 2௦20 ஐபிஎல் தொடரில் ஆடப் போவது உறுதி என்றும், அதிலும் அவர் தான் அந்த அணியின் கேப்டன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த அணி அறிவித்துள்ளது.
வழியனுப்பு விழா
தோனி ஓய்வு பெற வேண்டி ஒரே ஒரு தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக முன்பு ஒரு தகவல் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.