சுஷாந்த் சிங் ராஜ்புத்
பாலிவுட்டில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், நாடு முழுவதும் புகழ்பெறுவதற்கு காரணமாக இருந்தது 'எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் தான். தோனியை போலவே அச்சு அசலாக உடல்மொழி, வசனம் என படத்தில் வாழ்ந்திருந்தார் சுஷாந்த் சிங்.
தோனியுடனான நட்பு
ஒருபுறம் சுஷாந்த் சிங்கின் குணம், மற்றொருபுறம் தோனி ரசிகர்களின் ஆதரவு என இந்தியாவில் பிரபலமான நடிகராக உருவெடுத்திருந்தார். இதே போல தோனியுடனும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு சென்று வந்ததால் முக்கிய பிரமூகரானார்.
6ம் ஆண்டு
இந்நிலையில் அந்த எம்.எஸ்.தோனி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து சுஷாந்த் சிங்கின் நடிப்பு திறமை குறித்தும், இந்தியாவின் சிறந்த பயோபிக் திரைப்படம் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் தியேட்டர்களில் அத்திரைப்படத்தின் காட்சிகள் வருவது போன்ற வீடியோக்களும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகின்றன.
ரசிகர்கள் போர்க்கொடி
இதுஒருபுறம் இருக்க, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டமும் இணையத்தில் வெடித்துள்ளது. ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் இருந்த வந்த அழுத்தம் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ள நிலையில், பாலிவுட்டை இனி ஒதுக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.