சச்சின் சம்பவம்
1999இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் சச்சின் டெண்டுல்கரின் தோள்பட்டையில் பட்ட பந்துக்கு எல்பிடபுள்யூ கொடுத்து ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் டேரில் ஹார்ப்பர். அந்த சர்ச்சை இன்று வரை கூட பேசப்பட்டு வருகிறது.
கடைசி டெஸ்ட் தொடர்
அதே அம்பயர் தன் கடைசி டெஸ்ட் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டிகளுக்கு அம்பயராக செயல்பட்டார். அந்த தொடரின் முதல் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் அறிமுகம் செய்யப்பட்டார்.
பிரவீன் குமார் தடை
அவர் பிட்ச் மீது ஓடியதாக அம்பயர் டேரில் ஹார்ப்பர் எச்சரித்தார். பின் அவரை தடை செய்து அதிர வைத்தார். கேப்டன் தோனி அப்போது கடும் கோபம் கொண்டார். புதிய வீரரிடம் கொஞ்சம் தயவு காட்டலாமே என தோனி கூறி உள்ளார்.
தோனி கோபம்
ஆனால், டேரில் ஹார்ப்பர் தொடர்ந்து மறுத்து இருக்கிறார். பின் தோனி கோபம் அடைந்த நிலையில், "உங்களால் இதற்கு முன்பும் நாங்கள் சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறோம் ஹார்ப்பர்" என கூறி இருக்கிறார். அதைக் கேட்டு சிரித்து விட்டு நகர்ந்து விட்டார் ஹார்ப்பர்.
மறக்காத தோனி
அந்தப் போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், தோனி அந்தப் போட்டியில் பிரவீன் குமார் தடை மட்டுமின்றி, இந்திய அணிக்கு தவறாக வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் மறக்கவில்லை. அது குறித்து பரபரப்பை கிளப்பினார்.
தோனி என்ன சொன்னார்?
செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த போட்டியில் சரியான தீர்ப்புகள் அளிக்கப்பட்டு இருந்தால், போட்டி முன்பே முடிந்து இருக்கும். நான் இப்போது ஹோட்டலில் இருந்து இருப்பேன் என கூறி அதிர வைத்தார். அதைக் கண்டு ஹார்ப்பர் கோபம் கொண்டார்.
தோனி மிரட்டினார்
தோனி தன்னை மிரட்டினார் என ஐசிசியிடம் புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், ஐசிசி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், பெரும் ஏமாற்றம் அடைந்தார் டேரில் ஹார்ப்பர்.
ஓய்வு
ஐசிசி நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த தொடரின் மூன்றாவது போட்டியுடன் ஓய்வு பெற இருந்த ஹார்ப்பர், முதல் போட்டியுடன் ஓய்வு பெற்றார். அந்த சர்ச்சையுடன் ஹார்ப்பரின் பணி நிறைவு பெற்றது. பிரவீன் குமாருக்கு முன் ஆஷிஷ் நெஹ்ராவையும் ஒரு முறை தடை செய்து இருக்கிறார் இந்த ஹார்ப்பர்.