தோனி ஓய்வு பேச்சு
தோனி ஓய்வு குறித்து 2019 உலகக்கோப்பை தொடர் முதலே பேச்சு இருந்து வருகிறது. எனினும், தோனி இதுவரை ஓய்வு அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்திய அணியிலும் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார்.
2020 ஐபிஎல்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கும் என கூறப்பட்டது. அதற்கேற்ப தோனியும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றார். தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
கொரோனா வைரஸ் அச்சம்
ஆனால், இதனிடையே கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்தது. மார்ச் துவக்கத்தில் இந்தியாவிலும் தீவிரமாக பரவத் துவங்கியது. அதன் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது.
தோனியின் எதிர்காலத்துக்கும் தடை
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. இது தோனியின் எதிர்காலத்துக்கும் பெரிய தடையாக மாறி உள்ளது. அவர் தன் பார்மை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் ஓய்வு?
இந்த நிலையில், தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளதாக மீண்டும் சில தகவல்கள் கூறப்பட்டு வந்தன. தோனி தன் பார்மை நிரூபிக்காமல் இந்திய அணியில் இடம் பெற முடியாது. இளம் வீரர்களை தாண்டி அவர் இடம் பெற முடியாது என ஒரு சிலர் கூறி வந்தனர்.
இளம் வீரர்கள்
ராகுல், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் தற்போது அணியில் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வருகிறார்கள். இவர்களை தவிர சஞ்சு சாம்சன் அணியில் தன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், தோனி அணியில் இடம் பெற முடியாது.
நெருங்கிய நண்பர் சொன்னது என்ன?
இந்த நிலையில், தோனி ஓய்வு தான் அடுத்த திட்டம் என வெளியாகும் தகவல்கள் பற்றி அவரது நெருங்கிய நண்பர் பேசினார். தோனி தான் இன்னும் உடற்தகுதியோடு இருப்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார். ஓய்வு முடிவு பற்றி தோனியின் எதிர்வினை பற்றியும் அவர் பேசினார்.
கோபம் அடைவார்
"ஓய்வு பற்றி தோனியிடம் பேசினால் அவர் கோபம் அடைவார். அவர் அனைவரையும் விட உடற்தகுதி கொண்டவர் என்றும், இந்தியாவின் வேகமான விக்கெட் கீப்பர் எனவும் எண்ணுகிறார்" என தோனியின் மனதில் இருப்பதை கூறினார்.
கடும் பயிற்சி
"(கொரோனாவால்) அனைத்தும் தடைபடும் முன் கடந்த சில மாதங்களாக அவர் கடும் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் இத்தனை கடுமையாக பயிற்சி செய்து நான் பார்த்ததே இல்லை. அவர் தான் இளமையுடன் இல்லை என்பதை உணர்ந்துள்ளார். அதனால் தான் தன்னை உடற்தகுதியுடன் வைத்துக் கொள்ள கடுமையாக பயிற்சி செய்கிறார்" என்றார்.
ரசிகர்கள் உள்ளனர்
மேலும், "தன்னை ஆதரிக்க யாரும் இல்லை எனும் நிலையில் கூட அவர் தன்னை குறித்து எண்ணியது தவறு என நிரூபித்துள்ளார். ஆனால், இப்போது பல லட்சம் ரசிகர்கள் அவரை ஆதரித்து வருகின்றனர். sஎனவே, அவர் தன் வாய்ப்புகளை நிச்சயம் பயன்படுத்துவார்" என்றார் அந்த நண்பர்.