தொடர் நாயகன்
யுவராஜ் சிங் தோனிக்கும் மூத்த வீரர். 2000மாவது ஆண்டு முதல் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வெற்றிகளில் அவரது பங்கு அதிகம். 2011 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றார்.
போராட்டம்
அதன் பின் புற்றுநோய் காரணமாக சில ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார் யுவராஜ் சிங். அதன் பின் போராடி மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்த அவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற முடியாமல் தவித்தார்.
மீண்டும் வாய்ப்பு
2017ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்ற அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டிகளில் தன் அதிக பட்ச ரன்களை பதிவு செய்தார். அதன் பின் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் வாய்ப்பு பெற்றார்.
வாய்ப்பு இல்லை
அந்த தொடரில் ஒரு அரைசதம் அடித்த போதும் அணியில் வாய்ப்பை இழந்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது குறித்து தோனி முன்பே தெரிவித்ததை பற்றி ஒரு பேட்டியில் தற்போது கூறி இருக்கிறார் யுவராஜ் சிங்.
கோலியின் ஆதரவு
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி ஆன பின் யுவராஜ் சிங் முதன் முறையாக 2017இல் இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்றார். அந்த தொடரில் தனக்கு கேப்டன் கோலியின் ஆதரவு இன்றி வாய்ப்பு கிடைத்து இருக்காது என்று கூறினார் யுவராஜ்.
ஆதரித்தார்
"நான் மீண்டும் அணியில் இடம் பெற்ற போது விராட் கோலி என்னை ஆதரித்தார். அவர் என்னை ஆதரிக்காமல் இருந்து இருந்தால் என்னால் மீண்டும் அணியில் இடம் பெற்று இருக்க முடியாது." என்று கூறிய யுவராஜ், அடுத்து தோனி தான் தனக்கு தெளிவை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
தோனி தெளிவை அளித்தார்
"ஆனால், தோனி தான் 2019 உலகக்கோப்பை குறித்த சரியான திட்டத்தை எனக்கு காட்டினார். தேர்வுக் குழு என்னை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கவில்லை என்பதை கூறினார். அவர் தான் எனக்கு தெளிவை அளித்தார். அவரால் என்ன முடியுமோ அதை செய்தார்" என்றார் யுவராஜ் சிங்.
அதிக நம்பிக்கை
"2011 உலகக்கோப்பை வரை தோனி என் மீது அதிக நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் அப்போதும் நீங்கள் தான் என் முக்கிய வீரர் என்று கூறுவார். ஆனால், நான் நோயில் இருந்து மீண்ட பின் போட்டி மாறிவிட்டது. அணியில் நிறைய மாற்றம் நடந்து விட்டது." என்றார் யுவராஜ் சிங்.
என் தனிப்பட்ட முடிவு
"2015 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அது என் தனிப்பட்ட முடிவு. ஒரு கேப்டனாக எல்லாவற்றையும் நாம் சரி என்று சொல்லி விட முடியாது. கடைசியில் நாடு (தேசிய அணி) எப்படி செயல்படுகிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும்" என்றார் யுவராஜ் சிங்.