2012 ஆசிய கோப்பை
2012 ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. அந்த தொடரில் ஐந்தாவது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் நாசிர் ஜாம்ஷேத் அதிரடியாக ரன் குவித்தனர்.
ரன் குவிப்பு
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தனர். அவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் தவித்தனர். தோனி அதனால் பரபரப்பாக இருந்தார். ஹபீஸ் 105, நாசிர் ஜாம்ஷெத் 112 ரன்கள் குவித்து வெளியேறினர்.
எட்டு பந்துவீச்சாளர்கள்
அவர்கள் சென்ற பின் உமர் அக்மல் 28, யூனிஸ் கான் 52 ரன்கள் குவித்தனர். இவர்களும் பவுண்டரியாக அடித்ததால் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் தோனி எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை.
ரோஹித் - கோலி மோதல்
இதன் இடையே அந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படு மோசமாக இருந்தது. ரோஹித் சர்மா - விராட் கோலி ஒருமுறை பந்தை பிடிக்க செல்லும் போது ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டனர். அதனால், பாகிஸ்தான் அணி மூன்று ரன்களை எளிதாக எடுத்தது.
தோனி கோபம்
அதைக் கண்ட கேப்டன் தோனி அப்போது அவர்களை கண்டு கோபம் அடைந்தார். நீங்கள் விழிப்புடன் பீல்டிங் செய்யாமல் மோதிக் கொண்டு எப்படி 3 ரன்களை விட்டுக் கொடுக்கலாம் என்பது போல அவர்களை பார்த்துள்ளார். அதனால், ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அழுத்தத்துக்கு உள்ளாகினர்.
சச்சின் - விராட் கோலி
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. அந்தப் போட்டியில் கம்பீர், சச்சின் துவக்கம் அளித்தனர். கம்பீர் டக் அவுட் ஆனார். அடுத்து சச்சின் - விராட் கோலி இணைந்தனர். சச்சின் 52 ரன்கள் குவித்தார். கோலி விக்கெட் விழாமல் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார்.
கோலி - ரோஹித் கூட்டணி
சச்சின் ஆட்டமிழந்த பின், கோலியுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்து 172 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 46வது ஓவரில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 48வது ஓவரின் முதல் பந்தில் கோலி 183 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா வெற்றி
அப்போது இந்திய அணி 318 ரன்கள் எடுத்து இருந்தது. இறுதியில் ரெய்னா - தோனி சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தனர். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. விராட் கோலியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் அந்தப் போட்டியில் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியாத போட்டி
கேப்டனின் கோபத்தை சேஸிங் மூலம் மறக்க வைத்தனர் விராட் கோலி ரோஹித் சர்மா. மேலும், அந்தப் போட்டிக்கு பின் தான் விராட் கோலியை கிரிக்கெட் உலகம் உற்று நோக்கத் துவங்கியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அந்த சேஸிங் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.