தோனி ஓய்வு பெறக் கூடாது
இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில், தோனி இப்போது ஓய்வை அறிவிக்கக் கூடாது. அவரிடம் ஒருவிதமான அமைதி நிலவுகிறது. அவர் ஓய்வை அறிவிக்கக் கூடாது. மாறாக அவரிடம் சர்வதேச போட்டியில் இன்னொரு ரவுண்ட் அடிக்கக் கூடிய அளவுக்கு திறமை உள்ளது. தன்னைச் சுற்றிலும் நடப்பதை அவர் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.
தோனியின் அருமையான கெரியர்
அவருடைய கெரியர் என்பது மிகவும் அருமையானது, அபாரமானது. நாம் அதைப் பார்த்து அனுபவித்துள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளுக்கு நிச்சயம் அவரால் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் பிராட் ஹாக். 38 வயதாகும் தோனி கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில்தான் ஆடினார். அப்போட்டியில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு தோனி ஒரு நாள் போட்டிகளில் ஆடவே இல்லை.
அமைதியாகி விட்ட தோனி
அதன் பிறகு தோனி அமைதியாகி விட்டார். இந்திய அணி நிர்வாகமும் அவரை அணியில் சேர்க்கவில்லை. அதேசமயம், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்றோர் விக்கெட்கீப்பர் பணிக்கு மாற்றி மாற்றி பரிசோதிக்கப்பட்டனர். ஆனால் இன்னும் நிரந்தரமாக யாரும் அந்த இடத்தில் அமர முடியவில்லை. சமீபத்தில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில், ஐபிஎல் போட்டிகளில் தோனி சிறப்பாக ஆடினால் நிச்சயம் அவர் இந்திய அணிக்குத் திரும்ப முடியும் என்று கூறியிருந்தார்.
ஐபிஎல் தள்ளிப் போனது
ஆனால் தோனியின் நேரமோ என்னவோ, கொரோனாவைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போய் விட்டன. ஏப்ரல் மாதத்திற்குப் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. இதனால் தோனியின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனாலும் அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன்தான் உள்ளனர்.