தோனி கேட்ட ரிவ்யூ
நேற்று பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை கடைபிடித்து ஆடினர். இதனால், 7 ஓவர் வரை விக்கெட் கிடைக்கவில்லை. 8வது ஓவரை சாஹல் வீசினார். அவர் வீசிய ஆறாவது பந்து இமாம் உல் ஹக் காலில் பட்டது. அது பேட்டில் பட்டு பின்னர் தான் காலில் பட்டது என நினைத்து அம்பயர் அவுட் கொடுக்க மறுத்து விட்டார். சாஹல், கேப்டன் ரோஹித் உட்பட அனைவரும் இதை ஏற்றுக் கொண்ட நிலையில், ரிவ்யூ போகலாம் என்ற முடிவை எடுத்தார் தோனி.
பாகிஸ்தானின் முதல் விக்கெட்
தோனியின் முடிவை ஏற்று இந்தியா ரிவ்யூ கேட்டது. யாருக்கும் நம்பிக்கை இல்லாத நிலையில், ரிவ்யூ பார்த்ததில் விக்கெட் உறுதியானது. இதனால், தோனியின் முடிவை பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர். ஒருவேளை பாகிஸ்தான் நீண்ட நேரம் முதல் விக்கெட்டை இழக்காமல் இருந்து இருந்தால், இந்திய அணி கடும் அழுத்தத்தில் தவறுகள் செய்ய துவங்கி இருக்கும்.
தோனியின் ரன் அவுட் முடிவு
அடுத்து பாகிஸ்தானின் பாபர் ஆசாம் எதிர் திசையில் இருந்து ரன் ஓட முயன்றார். அப்போது பேட்டிங் செய்து வந்த அஹ்மது ரன் வேண்டாம் என அவரை திருப்பி அனுப்பினார். இந்த சூழ்நிலையை சில நொடிகளில் கணித்த தோனி பந்துவீச்சாளர் பகுதியில் பந்தை வீசு, என் பக்கம் வேண்டாம் என சைகை காட்டி நின்றார். உண்மையில் பந்துக்கு அருகில் இருந்தது தோனி தான். எனினும், எதிர் திசையில் பாபர் ஆசாம் நீண்ட தூரம் ஓடி வந்து விட்டார் என்பதை சில நொடிகளில் கணித்து சைகையால் உணர்த்தினார் தோனி.
தோனியின் அனுபவம் தேவை
தோனி சில சமயம் பேட்டிங்கில் சொதப்புகிறார் என கூறி வரும் சிலர், இது போன்ற தோனியின் அனுபவத்தை கவனிக்க தவறி விடுகின்றனர். தோனி ஆசிய கோப்பையில் இரண்டு முறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு வந்தது. ஹாங்காங் அணிக்கு எதிராக டக் அவுட் ஆனாலும், வங்கதேச அணிக்கு எதிராக நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் 33 ரன்கள் எடுத்தார். தோனி உலகக்கோப்பை வரை அணியில் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.