விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வெற்றிடம்
இந்திய கிரிக்கெட்டில் 2000மாவது ஆண்டில் இருந்தே விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுக்கான வெற்றிடம் இருந்தது. அப்போதைய கேப்டன் கங்குலி அதை நிரப்ப சரியான வீரரை தேடி வந்தார். அப்போது பதின்பருவத்தில் இருந்த பார்த்திவ் பட்டேல் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
பார்த்திவ் - தினேஷ்
அவர் சில போட்டிகளில் ஆடினாலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. அதனால், அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். அவருக்கு பின் தினேஷ் கார்த்திக் அணியில் தேர்வு செய்யப்பட்டார். அவரும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை.
தோனி தேர்வு
இதை அடுத்து தான் உள்ளூர் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி வந்த தோனியை தேர்வு செய்தது இந்திய அணி. தோனி முதல் தொடரில் பேட்டிங்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனினும், இரண்டாவது வாய்ப்பை அளித்தார் கேப்டன் கங்குலி.
அதிரடி சதம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி தனி ஆளாக அதிரடி சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அப்போது முதல் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆனார். 2004 முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரை இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தான்.
பார்த்திவ்வுக்கு வாய்ப்பு இல்லை
தோனி தன் இடத்தை உறுதி செய்த பின் பார்த்திவ் பட்டேல் தன் வாய்ப்பை இழந்தார். உள்ளூர் போட்டிகளில் அவர் சில சமயம் சிறப்பாக செயல்பட்ட போது கூட மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே அணியின் வாய்ப்பு பெற்றார். அதிலும் அவருக்கு களமிறங்கும் வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.
தோனி ஓய்வு
தோனி 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் ஓய்வு பெற உள்ளதாக பல மாதங்களாக வதந்திகள் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று தோனி இரவு 7.29 மணிக்கு தோனி தன் ஓய்வை அறிவித்தார்.
மனமார பாராட்டிய பார்த்திவ்
தோனி ஓய்வை அறிவித்த நிலையில், பார்த்திவ் பட்டேல் அவரை மனமார பாராட்டி, வாழ்த்தி இருந்தார். அவரது பதிவில், "வாழ்த்துக்கள் மாஹி.. என்ன அற்புதமான, அற்புதமான ஒரு கேரியர். இந்திய அணிக்காக ஆடிய ஆகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என குறிப்பிட்டு இருந்தார்.
தோனியின் திறமை தான் காரணம்
தோனி தன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதால் தான் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என முன்பு வெளிப்படையாகவே கூறியவர் தான் பார்த்திவ் பட்டேல். அதற்கு தோனியின் திறமை தான் காரணம் என அப்போதே பாராட்டி பேசி இருந்தார்.
பெரிய மனது
தற்போது டோனியின் ஓய்வை அடுத்து பார்த்திவ் பட்டேல் மனம் திறந்து பாராட்டி உள்ளார். அதிலும் "இந்திய அணிக்காக ஆடிய ஆகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்" என தோனியால் வாய்ப்பை இழந்த பார்த்திவ் பட்டேல் சொல்கிறார் என்றால் அது அவரின் பெரிய மனதை காட்டுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.