சிஎஸ்கே அணியில் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008இல் துவங்கப்பட்டது முதலே தோனி தான் அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இடையே இரு ஆண்டுகள் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டு மீண்டு வந்த போதும் தோனி தக்க வைக்கப்பட்டதுடன், மீண்டும் கேப்டனாக தொடர்கிறார்.
சிறந்த கேப்டன்
தோனி தலைமையில் சிஎஸ்கே அணி தான் ஆடிய ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் பிளே-ஆஃப் வரை முன்னேறி உள்ளது. மூன்று முறை ஐபிஎல் கோப்பையும் வென்றுள்ளது. தோனியை தவிர வேறு யாரையும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சிந்தித்து கூட பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஓய்வு
ஆனால், அடுத்த கேப்டனை தேர்வு செய்வதற்கான நேரம் வந்து விட்டது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு 39 வயது ஆகிறது. இனியும் அவர் தீவிர கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது கடினமான காரியம்.
அடுத்த சிஎஸ்கே கேப்டன் யார்?
2020 ஐபிஎல் தொடருடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த சிஎஸ்கே அணி கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை குறித்து தான் தோனி சிந்தித்து வருவதாக சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ கூறி உள்ளார்.
பிராவோ என்ன சொன்னார்?
"கொஞ்ச காலமாகவே இது அவரது மனதில் இருக்கிறது என எனக்கு தெரியும். நாம் எல்லோருமே ஒரு கட்டத்தில் வெளியேறித் தான் ஆக வேண்டும். எப்போது வெளியேறி, ரெய்னா அல்லது வேறு இளம் வீரரிடம் அணியை கொடுப்பது என்பது தான் தெரிய வேண்டும்" என்றார் பிராவோ.
ரெய்னா - தோனி விரிசல்
சுரேஷ் ரெய்னா சமீபத்தில் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகினார். அவருக்கும், தோனிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகக் கூட சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக ரெய்னா வர முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
ரெய்னாவுக்கு பதவி?
மறுபுறம் ரெய்னாவுக்கு தற்போது 33 வயதாகிறது. அவர் கேப்டன் பதவியை அடுத்த ஆண்டு ஏற்றால் கூட அவரால் இரண்டு அல்லது மூன்று சீசனுக்கு மட்டுமே கேப்டனாக செயல்பட முடியும். அவரது பேட்டிங் பார்மையும் அவர் சமாளிக்க வேண்டும்.
இளம் கேப்டன்
பிராவோ கூறியது போல இளம் வீரர் ஒருவர் கையில் தோனி கேப்டன் பதவியை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணியிலும் விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்து அவருடன் இருந்து அவரை மெருகேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசகர் தோனி
அது போலவே, அடுத்த ஆண்டு தோனி ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தொடர்வார் என சிஎஸ்கே வட்டாரம் கூறி வருகிறது. அப்போது இளம் கேப்டன் ஒருவரை நியமித்து, தோனி அவரை மெருகேற்றக் கூடும்.