அடிலைய்ட்: அடிலைட் விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் ஷுவை கழற்ற சொல்லி ஆஸ்திரேலிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த 15 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை போட்டி அடிலைட் நகரில் நடைபெற்றது.
அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மெல்பர்ன் நகருக்கு திரும்பும் வகையில் விமான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருந்தது. மெல்பர்னில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி, தென்ஆப்ரிக்க அணியை சந்திக்கிறது.
இதற்காக நேற்று காலை மெல்பர்ன் விமானத்தை பிடிப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இந்திய வீரர்கள் விமானநிலையத்துக்கு வந்துவிட்டனர்.
பின்னர் எல்லா பயணிகளையும் போலவே இந்திய வீரர்களும் வரிசையாக நிறுத்தி பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர். இந்திய கேப்டன் டோணி தனது உடமைகளை, பரிசோதனை எந்திரத்துக்கு அனுப்பப்படும் டிரேயில் வைத்து விட்டு, பின்னர் மெட்டல் டிடெக்டர் வழியாக அதனை எடுக்க சென்றார்.
டோணி மெட்டல் டிடெக்டரை கடந்த போது அது சத்தம் எழுப்பியதால் அவரை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் அழைத்தனர். பின்னர் அவரது பேண்ட் பாக்கெட்டை பரிசோதித்தனர். அதில் ஒன்றுமில்லை. இதனைத் தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் வழியாக டோணி மீண்டும் சென்ற போது அது மீண்டும் ஒலி எழுப்பியது.
இந்த முறை அதிகாரிகள் டோணியின் ஷுவை கழற்றி அதனையும் பரிசோதிக்கும் எந்திரத்துக்குள் வைத்து சோதித்து பார்த்தனர். அப்போது காலணியில் இருந்த சிறிய அளவிலான இரும்பு பொருளே மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்ப காரணமென்று அறியப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் மேலாளர் ரவி சாஸ்திரி அணிந்திருந்த கவ்பாய் தொப்பியில் மெட்டல் இருந்த காரணத்தினால், அவர் மெட்டல் டிடெக்டரை கடந்த போதும் ஒலி எழுப்பியது. இதையடுத்து ரவி சாஸ்திரியையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இரு முறை பரிசோதித்தனர்.