பெயர் நீக்கம்
பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனி பெயர் சமீபத்தில் நீக்கப்பட்டது. 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் அவர் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. இந்த நிலையில், பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்தது. இது தோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது.
பயிற்சி செய்த தோனி
தோனி ஒப்பந்தத்தில் இருந்து பெயர் நீக்கப்பட்ட செய்தி வெளியான அதே நாளில் தோனி ஐபிஎல் தொடருக்கான தன் வலைப் பயிற்சிகளை தொடங்கி அதிர வைத்தார். ஒப்பந்தத்தில் பெயர் நீக்கப்பட்டதால் தோனி ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்ற வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
ஐபிஎல் தான் வழி
உலகக்கோப்பை தொடருக்குப் பின் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடாத தோனி, அடுத்து 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, ரன் குவித்து தன் உடற்தகுதி மற்றும் பேட்டிங் பார்மை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியும் என கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் உறுதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி நிச்சயம் 2020 ஐபிஎல் தொடர் மட்டுமில்லாது, 2021 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவார் என உறுதியாக கூறி உள்ளது. ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி 2020 ஐபிஎல் தொடருக்குப் பின் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது எனக் கூறி அதிர வைத்துள்ளார்.
ரவி சாஸ்திரி சொன்னது..
தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது பற்றி கடந்த சில வாரங்களில் பல பேட்டிகளில் பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2020 ஐபிஎல் தொடரில் தோனி ஆடுவதைப் பொறுத்து தான் அவரை மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்வது பற்றி முடிவு செய்ய முடியும் என தொடர்ந்து கூறி வருகிறார்.
அழுத்தம்
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தோனி பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் ஆடியே தீர வேண்டும் என்ற அழுத்தத்தை தன் மீது போட்டுக் கொள்ள மாட்டார். டெஸ்ட் போட்டிகளில் கூட அவர் திடீரென ஓய்வு பெற்றுவிட்டார் என கூறி இருக்கிறார்.
எல்லோருக்கும் தெரிய வரும்
அந்தப் பேட்டியில் தோனி பற்றி கூறுகையில், "ஐபிஎல் வருகிறது. அதன் பின் அவரால் என்ன செய்ய முடியும் என எல்லோருக்கும் தெரிய வரும். அவருக்கும் தெரிய வரும். தேர்வுக் குழுவுக்கும் தெரிய வரும். கேப்டனும் அதை பார்ப்பார்" என்றார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
வலிய புகுத்த மாட்டார் தோனி
மேலும் கூறுகையில், "மற்ற எல்லோரையும் விட முக்கியமாக அவருக்கே அது தெரிய வரும். நான் மக்களிடம் என்ன சொல்ல முயல்கிறேன் என்றால் தன்னை எதன் மீதும் தோனி வலிய புகுத்திக் கொள்ள மாட்டார். உங்களுக்கும் அவரை தெரியும். எனக்கும் அவரை தெரியும்" என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு
"பல வருடங்களாக, அவர் இது போன்ற விஷயங்களில் மிக நேர்மையாக இருக்கிறார். உதாரணமாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் இருந்து அவர் நிறுத்திக் கொண்டதை கூறலாம். அவர் 100 டெஸ்ட் வரை காத்திருக்கவில்லை. அவர் அப்படிப்பட்ட நபர் இல்லை" என்றார் ரவி சாஸ்திரி.
தயாராக இருப்பார் தோனி
மேலும், "அவர் ஐபிஎல்லுக்காக இன்னும் பயிற்சியை துவக்கி விட்டாரா. இல்லையா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அவர் ஐபிஎல் ஆடுவதில் ஆர்வமாக இருந்தால், அனைத்து விஷயங்களும் இப்போது முன்னே வந்து விடும். அவர் அதற்கு தயாராக இருப்பார்" என்றார்.
உங்களுக்கு மிக்க நன்றி
"உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் ஐபிஎல்லை ஆரம்பிக்கலாம். ஆனால், சரியாக ஆடவில்லை என கருதினால், அவர் "உங்களுக்கு மிக்க நன்றி" என கூறி விட்டு சென்று விடுவார்" என்று அதிர வைக்கும் வகையில் தோனியின் எதிர்காலம் பற்றி கூறினார் ரவி சாஸ்திரி.