வதந்திகள்
2019 உலகக்கோப்பை முதலே தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வதந்தி பரவியது. ஆனால், தோனி இதுவரை அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தோனி விடுப்பு
2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி, இந்திய அணி ஆடிய எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் விடுப்பில் இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி வருகிறது. அவர் இனி எப்போது அணிக்கு திரும்புவார் என்பதும் தெரியாத நிலை உள்ளது.
மர்மம்
தோனி தானாகவே அணியை விட்டு விலகி இருக்கிறாரா? அல்லது இந்திய அணி நிர்வாகம் அவரை ஒதுக்கி வைத்திருக்கிறதா? என்பது மர்மமாகவே உள்ளது. இதற்கிடையே தோனி ஜனவரி மாதம் வரை அணிக்கு திரும்புவது பற்றி கேள்வி எழுப்ப வேண்டாம் என கூறி இருந்தார்.
உண்மையை உடைத்த ரவி சாஸ்திரி
தோனியின் அடுத்த திட்டம் என்ன என தெரியாமல் அவரது ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில், அதிர வைக்கும் தகவலை கூறி இருக்கிறார் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
என்ன சொன்னார்?
தோனியிடம் தான் பேசியதாகவும், தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது போல விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெறுவார் என்றும் கூறி இருக்கிறார் ரவி சாஸ்திரி. மேலும், ஐபிஎல் செயல்பாடுகளை வைத்து, அவர் மீண்டும் டி20 அணிக்கு திரும்புவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
டி20 மட்டும் தான்
ரவி சாஸ்திரி கூறுகையில், "நான் தோனியுடன் பேசினேன். அது எங்களுக்குள் நடந்தது. அவர் டெஸ்ட் கேரியரை முடித்துக் கொண்டார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விரைவில் தன் கேரியரை முடித்துக் கொள்வார். அனைத்து வாய்ப்புகளிலும், அவர் ஒருநாள் போட்டிகளில் தன்னை முடித்துக் கொள்வார்" என்றார்.
மதிக்க வேண்டும்
மேலும், "அவர் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இடைவிடாமல் ஆடினார் என்பதை மக்கள் மதிக்க வேண்டும். அவரது வயதில் அவர் ஆட விரும்புவது டி20 கிரிக்கெட் மட்டுமே" என்றார்.
ஐபிஎல் ஆட்டம்
மேலும், "அவர் விரைவில் ஆடத் துவங்க வேண்டும். ஏனெனில், அவர் ஐபிஎல்-இல் ஆட வேண்டும். அவர் உடல் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறது? என்பதையும் பார்க்க வேண்டும்" என்றார்.
தோனி அனுபவம்
"அந்த நபரின் அனுபவம் மற்றும் பார்மை நாம் மதிக்க வேண்டும். அவர் 5 அல்லது 6ஆம் இடத்தில் பேட்டிங் செய்வார். அவர் ஐபிஎல்-இல் நன்றாக ஆடினால், மீண்டும் அணியில் தேர்வாக வாய்ப்பு உள்ளது" என்றார் ரவி சாஸ்திரி.
அடுத்தது என்ன?
தோனி விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என ரவி சாஸ்திரி கூறி இருக்கும் நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்போ, பின்போ தோனி அந்த அறிவிப்பை வெளியிடலாம்.