ஒதுங்கும் பிளெம்மிங்
சிஎஸ்கே அணியில் எல்லா முடிவுகளையும் கேப்டன் தோனி தான் எடுத்து வருகிறார். அதனால், அவரே எல்லா தவறுகளுக்கும் காரணம் என பயிற்சியாளர் பிளெம்மிங் ஒதுங்கிக் கொள்ளத் துவங்கி இருக்கிறார். மோசமான தோல்விகளால் சிஎஸ்கே அணி வீரர்கள் உடைந்து போயுள்ளனர்.
முதல் தவறு
சிஎஸ்கே அணி இந்த சீசனில் செய்த முதல் தவறு சுரேஷ் ரெய்னாவை விலக அனுமதித்தது தான். என்னதான் மோதல் ஏற்பட்டு இருந்தாலும் அவருடன் சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் சுமூகமாக நடந்து கொண்டிருக்கலாம். ரெய்னா மோதலுடன் விலகினார் என்ற செய்தி ரசிகர்கள் மனநிலையை மட்டுமல்ல, சிஎஸ்கே வீரர்களின் மனநிலையையும் பாதித்துள்ளது.
மாற்று வீரர் தேர்வு
ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க மாட்டோம் என்ற முடிவு தவறான ஒன்று. அதை விடுத்தாலும், அவருக்கு மாற்று வீரர் ஒருவரையாவது சிஎஸ்கே தேர்வு செய்து இருக்கலாம். அது வேறு ஒரு முக்கிய பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்படும் போது அணித் தேர்வில் உதவியாக இருந்திருக்கும். அதையும் செய்யவில்லை தோனி.
அணியின் சமநிலை
ஐபிஎல் தொடர் துவங்க இரண்டு வாரங்கள் இருக்கும் முன்பு சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய நிலையில், ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், மூன்று போட்டிகள் முடிந்த பின்னும் சிஎஸ்கே அணியில் சமநிலை ஏற்படவில்லை. வெறும் 5 பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு தோனி இதுவரை தான் செய்யாத முயற்சி ஒன்றை செய்து சொதப்பி வருகிறார்.
வெளியே இருக்கும் சிறந்த வீரர்கள்
சிஎஸ்கே அணியில் ஆடும் 11 வீரர்கள் சமநிலையை அளிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, பல நல்ல வீரர்கள் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளனர். பிராவோ காயத்தால் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நல்ல பார்மில் இருந்த இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் போட்டிகளில் ஆடவில்லை. அதற்கு காரணம், அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ஆட வைக்க முடியும் என்பது தான்.
ராயுடு குழப்பம்
சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் முதல் போட்டியில் அவர் விட்டுச் செல்லும் இடைவெளியை அம்பதி ராயுடு நிரப்பினார். அப்போது சிஎஸ்கே பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் அடுத்த இரு போட்டிகளில் உடல்நிலை காரணமாக ஆடவில்லை.
பேட்டிங்கில் மாற்று வீரரே இல்லை
அப்போது சிஎஸ்கே அணிக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு மோசமான திட்டங்களால் தோல்வி அடைந்தது. ரெய்னாவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்திருந்தால் அந்த வீரரை ஆட வைத்து இருக்கலாம். ஆனால், தற்போது பேட்டிங்கில் மாற்று வீரரே இல்லாத நிலையில் தவிக்கிறது சிஎஸ்கே.
தோனி தான் காரணம்
சுரேஷ் ரெய்னா விவகாரம், மாற்று வீரர் இல்லாமல் தடுமாறும் நிலை, சில வீரர்கள் சரியாக ஆடாத நிலையில் அணியின் சமநிலை இல்லாத சூழல், சேஸிங் செய்யும் போது நிதானமாக ஆடி பின் வேகம் எடுக்கலாம் என திட்டமிட்டு இரண்டு போட்டிகளில் சொதப்பியது என சிஎஸ்கே அணியின் பல பிரச்சனைகளுக்கு கேப்டன் தோனி தான் காரணம்.
பிளெம்மிங் மனநிலை
இருக்கின்ற வீரர்களை வைத்து சரியான அணியை தேர்வு செய்ய முடியாமல் தடுமாறுகிறார் பயிற்சியாளர் பிளெம்மிங். அவர் அளிக்கும் பேட்டிகளில் கூட தவறாமல் ராயுடு, ரெய்னா இல்லாத அணியை தேர்வு செய்ய கடினமாக உள்ளது என்றும், சிஎஸ்கே அணி இன்னும் சமநிலையை அடையவில்லை என்றும் கூறி வருகிறார்.
தோனிக்கு அழுத்தம்
மூன்று போட்டிகளின் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அடுத்த போட்டிகளில் வெற்றிகளை பெறாமல் போனால் சிஎஸ்கே அணி வீரர்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து உடைந்து விடுவார்கள். தோனிக்கு இதுவரை இல்லாத அளவு சிஎஸ்கே அணியில் அழுத்தம் உள்ளது, சிஎஸ்கே நிர்வாகம் அவரை நம்பினாலும் அவருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப் போகிறார் தோனி?