தோனி ஓய்வு
தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என பரவலாக செய்திகள் வெளியாகி வந்தன. இதனால் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் கடைசி போட்டிக்கு பின் தோனி ரசிகர்கள் மனமுடைந்து காணப்பட்டனர்.
பெற்றோர் சொல்வது என்ன?
கடந்த வாரம் தோனியின் பெற்றோரை சந்தித்து பேசி உள்ளார் அவரின் பால்ய கால பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி. அப்போது தோனியின் பெற்றோர், அனைத்து ஊடகங்களும் தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறி வருகின்றன. அவர்கள் சரியாகத் தான் கூறுகிறார்கள். எங்களால் இவ்வளவு பெரிய சொத்தை பராமரிக்க முடியவில்லை என கூறி உள்ளனர்.
சமாதானம் சொன்ன பானர்ஜி
தோனி 2020 உலகக்கோப்பை தொடர் வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என கருதும் பானர்ஜி, அவர்களை சமாதானப்படுத்தி பேசி இருக்கிறார். கடந்த 10-12 வருடங்களாக இதை பராமரித்து விட்டீர்கள். இன்னும் ஓராண்டு வரை உங்களால் இதை பார்த்துக் கொள்ள முடியும் என்று தோனி பெற்றோரிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
வியப்பு
தோனி ஓய்வு பெற வேண்டும் என்பதற்கு பலரும் அவரது வயது, மங்கி வரும் பேட்டிங் திறன் என பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். ஆனால், அவரது பெற்றோர் சொத்தை பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால், தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறி இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பிசிசிஐ முடிவு என்ன?
தோனி ஓய்வு பெறாவிட்டாலும், பிசிசிஐ அவர் விஷயத்தில் கடினமான சில முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரிஷப் பந்த் தான் இனி அணியின் விக்கெட் கீப்பர் என கூறப்பட்டு வருகிறது. தோனிக்கு அணியில் இடம் கிடைக்கும். ஆனால், போட்டிகளில் களமிறங்க மாட்டார். கிட்டத்தட்ட ஒரு துணை பயிற்சியாளர் போல அணியுடன் பயணம் செய்வார் என சில தகவல்கள் கூறுகின்றன.