சென்னை அணி அபாரம்
முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. சென்னை பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்கள். ருத்ராஜ் கெய்க்வாட் 32 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா 31ரன்கள், மொயீன் அலி 37 ரன்கள் சேர்த்தனர். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய டூ பிளிசிஸ் 59 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா தோல்வி
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி மிரட்டியது. ஆனால் வெங்கடேஷ் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவுட்டாக ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது. 91 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த கொல்கத்தா அதன்பிறகு 20 ஓவர்களில் 165 ரன்களே எடுத்தது. இதனால் சென்னை பெரு வெற்றி பெற்றது.
தல தோனி செய்த செயல்
இந்த போட்டியில் சென்னை கேப்டன் தல தோனி செய்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதாவது பீல்டிங் செய்தபோது கொல்கத்தா அணி வீரர் ராகுல் திரிபாதி காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் பீல்டிங் செய்யாமல் பாதியில் வெளியேறினார். அவர் கொல்கத்தா அணியில் பேட்டிங் செய்வாரா? என்ற கேள்வி எழுந்தது.
குவியும் பாராட்டு
ஆனால் கொல்கத்தாவுக்கு தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 7-வது வீரராக களம் இறங்கினார் ராகுல் திரிபாதி. காலில் அடிபட்டதால் சிரமத்துடன் களத்தில் விளையாடினார். ஆனால் 2 ரன்களில் அவுட்டானார். அப்போது மிகவும் சோகத்துடன் பெவிலியனுக்கு நடந்து சென்றார். இதனை கவனித்த தோனி, ராகுல் திரிபாதியின் தோளில் தட்டி கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'இதுதான் தல' என்று தோனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.