தோனியாக நடித்தவர்
தோனியாக நடித்து பிரபலம் ஆனவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். எம்எஸ் தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தில் தோனியாக அவர் சிறப்பாக நடித்து இருந்தார். அதன் மூலம், இந்தியா முழுவதும் நல்ல அறிமுகம் பெற்றார். அவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.
நண்பர்
அந்த படத்தில் நடிக்க அவர் தோனி, அவரது நண்பர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் பழகி தன்னை தயார் படுத்திக் கொண்டார். அதனால், அவர்கள் அனைவருக்கும் அறிமுகமான நண்பராக இருந்து வந்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
அதிர்ச்சி அடைந்துள்ளனர்
தோனி மற்றும் அவரது நட்பு வட்டாரம் அனைவரும் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட தகவலை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தோனி கடும் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தோனி கடும் வருத்தம்
இது பற்றி தோனியின் மேனேஜரும், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருமான அருண் பாண்டே கூறுகையில், என்ன நடந்தது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. என் வருத்தத்தை கூறும் நிலையில் நான் இல்லை. தோனியும் கடும் வருத்தத்தில் இருக்கிறார் என கூறினார்.
நல்ல வாழ்க்கை காத்திருந்தது
மேலும், சுஷாந்த்துக்கு 34 வயது தான் ஆகிறது. நல்ல வாழ்க்கை அவருக்கு காத்திருந்தது. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்றம், இறக்கம் இருக்கும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அவர்.
18 மாதங்கள் உழைப்பு
சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனி திரைப்படத்தில் நடிக்க 18 மாதங்கள் எடுத்துக் கொண்டார். அதில் 9 மாதங்கள் தோனியாக மாற பயிற்சி எடுத்துக் கொண்டார். 15 நாட்கள் முழுவதும் தோனியுடன் இருந்துள்ளார். சிறப்பாக நடிக்க வேண்டி கடுமையாக உழைத்துள்ளார்.
காயம்
முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பர் கிரண் மோரேவிடம் விக்கெட் கீப்பிங் பயிற்சியும் மேற்கொண்டார். அப்போது அவரது முதுகு எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டது. ஒரே வாரத்தில் அதில் இருந்து மீண்டு வந்து அசத்தினார். தோனி அப்போது அவரது ஈடுபாடைக் கண்டு வியந்துள்ளார்.
கடுமையாக பாதித்துள்ளது
தோனியாக நடிக்க அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவர் சிறப்பாக நடித்தார். ஆனால், இப்போது அவரது திடீர் மரணம் தோனியையும், அவரது நண்பர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.