சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய பத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே-ஆஃப் வரை சென்றுள்ளது. மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. அதற்கு யார் காரணம் என யாரைக் கேட்டாலும் கேப்டன் தோனியைத் தான் கை காட்டுவார்கள்.
தோனி சற்று வித்தியாசமானவர்
மற்ற கேப்டன்களிடம் இருந்து தோனி சற்று வித்தியாசமானவர். அணிக் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார். தன் உள்ளுணர்வு சார்ந்து தான் முடிவு எடுப்பார். புள்ளி விவரங்களை வைத்து முடிவு எடுக்க மாட்டார். இதெல்லாம் அனைவரும் அறிந்ததே.
இணைய நிகழ்ச்சி
இது பற்றி ஒரு இணைய நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.அப்போது தான் சீனிவாசன் தோனி தான் கூறிய சிறந்த வீரர் ஒருவரை அணியில் தேர்வு செய்ய மறுத்தார் எனக் கூறினார்.
கூட்டம்
சீனிவாசன் கூறுகையில், பந்துவீச்சு பயிற்சியாளர்கள் கூட்டங்களில் ஒவ்வொரு எதிரணி பேட்ஸ்மேன் குறித்தும் வீடியோ போட்டுக் காட்டி அவரின் பலம், பலவீனம் குறித்து விவாதிப்பார்கள்/ ஆனால், அந்தக் கூட்டங்களில் தோனி கலந்து கொள்ள மாட்டார் என்றார்.
தோனி வெளியேறி விடுவார்
பந்துவீச்சு பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் பிளெம்மிங் மற்ற அனைவரும் அங்கே இருப்பார்கள். தங்கள் கருத்துக்களை கூறுவார்கள், ஆனால், தோனி எழுந்து வெளியே சென்று விடுவார் என்று தோனியின் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகள் பற்றி கூறினார் சீனிவாசன்.
இல்லை சார்..
மேலும், தோனியின் உள்ளுணர்வு சார்ந்த முடிவுகள் பற்றி கூறுகையில் அந்த சம்பவத்தை குறித்தும் கூறினார். "ஒரு சிறந்த வீரர் இருந்தார். அவரை அணியில் தேர்வு செய்வது பற்றி நாங்கள் தோனியிடம் கூறினோம். ஆனால், அவர் இல்லை சார்.. அவர் அணியை நாசம் செய்து விடுவார்" எனக் கூறி விட்டார்" என்றார்.
உள்ளுணர்வின்படி முடிவு செய்த தோனி
சிஎஸ்கே அணியின் உரிமையாளரே ஒரு வீரரை சுட்டிக் காட்டியும், அந்த வீரர் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சிறந்த வீரராக இருந்தும், தோனி தன் உள்ளுணர்வின்படி அந்த வீரரை அணியில் தேர்வு செய்ய மறுத்து விட்டதை வெளிப்படையாக கூறினார்.
ஒற்றுமை தான் முக்கியம்
மேலும், ஒரு சிறந்த வீரரைக் காட்டிலும், அணியின் ஒற்றுமை தான் முக்கியம் என்பதில் தோனி எத்தனை உறுதியாக இருக்கிறார் என்பதையும் சுட்டிக் காட்டினார் சீனிவாசன். இந்த சம்பவத்தில் ஒரு முக்கிய கேள்வியும் எழுந்துள்ளது.
யார் அந்த வீரர்?
இந்த சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக இருப்பது ஒருபுறம் என்றாலும், தோனி ஒரு வீரரை தேர்வு செய்தால் அணியின் ஒற்றுமை நாசமாகி விடும் எனக் கூறி இருக்கிறார் என்றால், யார் அந்த வீரர் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளனர்.